Thursday, January 29, 2009

1971ஆம் ஆண்டு மற்றும் 1987-1989 காலப்பகுதிகளில் நடத்திய கிளர்ச்சிகளின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசினால் கொல்லப்பட்டார்கள். ஜே.வி.பி. ஒரு ஆயுதப் புரட்சிகர கட்சியாகவே நீடிக்குமென நம்பப்பட்டபோதும். இன்றைய அதன் நிலை ஒட்டுமொத்தமாக பாராளுமன்றவாதத்துக்குள் சரணாகதியடைந்து புரட்சிகர கொள்கைககளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்கும் சக்தியாக எப்படி ஆனது? "முதலாளித்துவ அரசு ஒடுக்கும் கருவி" என்கிற மார்க்சிய விளக்கத்தையும் மீறி அந்த அரசுக்கே நிழல் தலைமைவகிக்கும் நிலைமைக்கு மாறிய கதை என்ன? சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பேரினவாதத்துக்கும் பலியாகி ஒரு அதிகாரத்துவ அடக்குமுறை கட்சியாக பரிமாற்றமடைந்தது எவ்வாறு என்பதை அவ்வப்போது ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. குறிப்பாக சரிநிகரிலும் ஏனைய சஞ்சிகைகளிலும் பிரசுரிக்கட்டவை இவை.

Friday, January 23, 2009

மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 25 வருட நினைவுகள்


என்.சரவணன்.



(இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.)

இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்கு முறையினால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த இருபத்தைந்து வருட நினைவில் சில குறிப்புகள்.

அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...?

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்­பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொ­ழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷ்பிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை.

இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே.


கதிர்காமத் தாக்குதல்.

1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்பட்டது.

இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.


அழகு ராணி மனம்பேரி

பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.­க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர். மனம்பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியா­ற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்களால்
கடத்தப்பட்டாள்.


கடத்தலும் வதையும்

1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியளவில் மனம்பேரியின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெறிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.

அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”
மௌனம்
”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?”
”.........”
”நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”
இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர்.

மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.
”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...”
”ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார்.

”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைகளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள்.

மனம்பேரியை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.

ஒரு அறையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.
உயிர் பிரிந்தது.

எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.

”தண்ணீர் தண்ணீர்...” என முனகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடூர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.)

காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசிகளை அழைத்து பிணங்க­ளைப்
புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்பதைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இருவரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறுதியாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)

முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்­தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல்.

மனம்பேரியின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.

கொலைஞர்களின் முடிவு.

1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்ட இரு
இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்முறையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

அவர்களில் லெப்டினன்ட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.
(1996 ஏப்ரல்.4 சரிநிகர்)

ஜே.வி.பி. 8வது மாவீரர் தினம் விஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்



இம் மாதம் நவம்பர் 13ஆம் திகதிய­ன்று ஜே.வி.பி, 8வது மாவீரர் தினத்தை நினைவு கூரியது. இன்று இலங்கையில் சக்தி வாய்ந்த இடதுசாரி இயக்கமாக முதன்மை நிலையில் இருப்பது ஜே.வி.பி.யே. 1971, 1988 ஆகிய இருமுறையும் புரட்சி செய்யவெனப் புறப்பட்டு தோல்வி கண்டு, மீண்டும் புறப்பட்டுள்ள ஜே.வி.பி.யானது இன்றும், இடதுசாரி இயக்கங்களிலேயே பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். நிறுவனக் கட்ட­மைப்பு, ஒழுங்கு விதிகள், போன்ற இறுக்கமான ஒழுங்குக்குட்பட்டு இயங்கி வரும் ஜே.வி.பி, இன்றும் அதிகாரத் தரப்பினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்து வரும் இயக்கமா­கவும் எதற்கும் விலை­போகாத கட்சியாக­வும் இருந்து வருகிறது என்றால் மிகையி­ல்லை. 1989ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி அதன் ஸ்தாபகரும் தலைவ­ருமான றோகண விஜேவீர, ஆளும் அதிகார வெறிய­ர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்ய­ப்பட்டு, இறுதியில் ரகசியமாக சுடப்­பட்டு, எரிக்கப்பட்டார். அத்தின­த்தை வருடா வருடம் ஜே.வி.யினர் கொல்லப்பட்ட தங்களது தோழர்க­ளின் நினைவாக அனுஷ்டித்து வருகின்றனர்.

விஜேவீரவின், ”புரட்சிகர பாத்தி­ரம்”, கட்சிக்குள் தலைமை வழிபாடு சதா காலம் நிலவுவதற்கு அவரின் பாத்திரம், கட்சிக்­குள் ஜனநாயக மத்தியத்துவத்துக்கு வழங்கிய இடம், விமர்சனம் - சுயவிமர்சனம் என்பவை குறித்த அணுகுமுறை, ஆதிக்க சித்தாந்தங்களை சரியாக அடையாளம் காணாமை, கட்சிக்­குள்ளும் அதற்கு வெளியிலும் காணப்பட்ட அராஜகம் என்பன உட்பட அது போன்ற தன்மைகள் குறித்து இக்கட்டுரை பேசவில்லை. அது வேறு ஒரு களத்தில் விரிவாகப் பேசப்பட வேண்டி­யவை.

இக்கட்டுரை விஜேவீர படுகொலை செய்யப்­பட்டது சம்பந்தமாக மட்டும் பேசுகிறது. ஆதிக்க சக்திகள் புரட்சிகர சக்தி­களை எப்போதுமே விட்டு வைப்பதி­ல்லை என்பதும் அவ்வாறான புரட்சிகர அமைப்புகளை முழுமை­யாக அழிப்பதென்றால் அதன் தலைமையை அழித்து விட்டால் எல்லாம் அடங்கிவிடும் என நம்புவ­தும் சாதாரண­மானது. அவ்வாறான நம்பிக்கை வெறுமனே சோஷலிசப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு சமூகப் போராட்டங்ளையும் கூட இதே அணுகுமுறையில் ஆதிக்க சக்திகள் நம்பிக்கை வைத்து வரு­வது பொதுவாக காணக் கூடியதே. அந்த நம்பிக்கையின் நிமித்தமே விஜேவீர உட்பட ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்கள் (தற்போ­தைய தலைவர் சோமவங்ஷ அமரசிங்க தவிர்ந்த) அனைவரும் வேட்டையாடிக் கொல்லப்­பட்டனர். ஜே.வி.பி. மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வர நீண்ட காலம் எடுத்தது. இந்தக் கால தாமதத்து­க்கு விஜேவீர வளர்த்து வைத்தி­ருந்த ”தலைமை வழிபா­டும்” முக்கிய காரணமாக ஆகியிருந்தது. அதே வழிபாட்டுமுறையே இன்றும் அதன் போக்கில் குடிகொண்டுள்ளது.

”விஜேவீர வாக்குமூலம்”

”அன்புக்குரிய நாட்டு மக்களே! நான் மக்கள் விடுதலை முன்னணி­யின் தலைவர் றோகண விஜேவீர. நான் நவம்பர் 13ஆம் திகதி இராணு­வத்தினரால் கைது செய்யப்­பட்ட நிலையில் பேசுகிறேன். நேற்று கண்டியில்-உலபன பகுதியிலிருந்து இராணுவம் என்னைக் கைது செய்தது. பின் கொழும்பு இராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அதிகரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டேன். நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் நிலை பற்றிய எனது கருத்தென்னவென்­றால், நாடு அந்நிய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி­யிருக்­கும் இச்சூழ்நிலையில் பல அழிவு­களை எதிர்நோக்கிக் கொண்டிருக்­கிறது. இந்நிலையில் மக்கள் வன்முறையிலிருந்து விலகி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...”

றோகண விஜேவீர படுகொலை செய்யப்படுவதற்கு சில மணித்தி­யா­லங்களுக்கு முன் அவரை வதைக்­குள்ளாக்கி வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலம் இது. மேற்­படி வாக்கு மூலம் அடுத்த நாள் தொலைக் காட்சியிலும் காட்டப்­பட்டது.

வரலாறானது அதிகார வர்க்க­த்தின் பிடிக்குள் சிக்கி பலியான புரட்சிகர தலைவ­ர்களின் எத்த­னையோ பேரின் படுகொலை­களை­யும் கடந்து போய்க்கொண்டிருக்கி­றது.

சேகுவேரா சீ.ஐ.ஏ.வினால் பொலிவியா­வில் மர்மமான முறை­யில் கொலை செய்யப்­பட்டார். ஜெர்மானிய புரட்சிகர தலைவி ரோஸா லக்ஸம்பர்க் அந்நாட்டு அரச படையினரால் குரூரமாக கொலை செய்யப்­பட்டு ஆற்றில் தூக்கியெறியப்பட்டார். லியோன் ட்ரொஸ்கி சீ.ஐ.ஏ.வினால் குரூர­மான முறையில் கொலை செய்யப்­பட்டார். நக்ஸ­லைட் தலைவர் சாரு மம்தார் இந்திய ஆளும் வர்க்க கைக்கூலி­களால் ரகசியமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த போக்கின் தொடர்ச்சி இன்னும் மேலே மேலே சென்று கொண்டி­ருக்கிறது.


தலைமறைவும் தற்காப்புக்கான நிர்ப்பந்தமும்

1971 கிளர்ச்சி சிறிமாவோ பண்டாரநா­யக்க ஆட்சியினால் அழித்து அடக்கப்­பட்டது. இதன் போது 20,000 பேருக்கும் மேற்பட்­டோர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சிக்­கான சூத்திரதாரிகள் என்ற குற்றச்சாட்­டின் பேரில் விஜேவீர உட்பட 41 பேரின் மீது ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்யப்­பட்டனர். அவர்களில் 31 பேர் சிறைத்தண்டனை பெற்றனர்.

1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.ஆரால், சிறிமாவுக்கு எதிரான ஆயுத­மாக ”அரசியல் கைதிகளை விடுதலை செய்” எனும் கோஷம் பாவிக்கப்பட்டது. வரலாறு காணாத வெற்றி பெற்ற ஜே.ஆர் ”சொன்னபடி செய்யும் நேர்மையாள­னாக” தன்னை காட்ட 1977 நவம்­பர் 2ம் திகதி விஜேவீர உட்பட பல அரசியல் கைதிகளை விடுவித்தார்.

1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதி­பதித் தேர்தலில் ஜே.ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட அறுவரில் மூன்றாவதாக பெரும்பான்மை வாக்குகள் விஜேவீரவுக்கு கிடைத்­திருந்தது. அத்துடன் மாவட்ட சபைத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு கணிச­மான ஆசனங்கள் கிடைத்தி­ருந்தன. மாவட்ட சபைத் தேர்தலில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை எதிர்த்து ஜே.வி.பி. வழக்கும் தொடுத்திருந்தது. இந்த போக்கு தனது எதிர்கால அரசியலுக்கு அச்சுறுத்­தல் என்பதை ஜே.ஆர் விளங்கிக் கொள்ள நேரம் செல்ல வில்லை. பலமடைந்து வரும் ஜே.வி.பி.யை அடக்க தருணம் பார்த்து வந்த ஜே.ஆர்., அடுத்த வருடமே 83 இனக்­கலவரத்தை தூண்டிவிட்டதுமல்லாமல் அதற்கான முழுப் பொறுப்பையும் இடதுசாரிக் கட்சிகளான ஜே.வி.பி., நவ சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் மீது சுமத்தினார்.

அக்கட்சிகளை தடைசெய்த­துடன், அதன் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். பாராளு­மன்ற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்­கள் பலர் சரணடைந்தனர். இந்த நடவடி­க்கை ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்கு இட்டுச் சென்றது. காலப்போக்கில் ந.ச.ச.க., கம்யூனி­ஸ்ட் கட்சி ஆகியன மீதான தடைகள் நீக்கப்பட்ட போதும் ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட­வில்லை. தமது கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரி விஜேவீர பல முறை ஜே.ஆருக்கு கடிதம் எழுதியிருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்ப்டது. ஜே.வி.பியின் தலைம­றைவு அரசியலை இந்த நடவடிக்கை ஸ்தூலப்படுத்தியது. காலப் போக்கில் ஜே.வி.பியினர் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்­பட்டது. இதன் காரணமாக ஜே.வி.­பி.யினர் தமது தற்காப்புக்காக ஆயுத பாணிகளாக வேண்டிய நிர்ப்பந்தத்­துக்கு தள்ளப்பட்டனர். இந்த அடக்குமுறை அதிகரித்த வேளையில் அதற்கு பதிலடி கொடுத்தனர். பிரேமதாச பதவியில் அமர்ந்ததும் ஜே.பி.யினர் எனும் பேரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞ­ர்கள் கொல்லப்­பட்டனர். இறுதியாக விஜேவீர கொல்லப்பட்டதுடன் ஜே.வி.பி.யின் அனைத்து வேலைகளும் முடக்கப்­பட்டன. அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தனது மொழியில் கேம் ஓவர் (Game over ) என்றார்.


அரசு-ஜே.வி.பி பேச்சுவார்த்தை

ஜே.வி.பி. தலைவர்களைப் பிடிப்பதற்­கென்றே பிரேமதாச அரசா­ங்கம், ”ஒப்பரேஷன் கம்பைன்ஸ்” எனும் இராணுவ உட்பிரிவொன்றை உருவாக்கியிருந்தது.

ஜே.வி.பி.யை முழுமையாக அழித்து­விடும் திட்டத்தை அரசா­ங்கம் மிகவும் தந்திரமாக செய்து வந்தது. பிரேமதாச பல தடவை ஜே.வி.பியுடன் தான் பேச்சுவார்­த்தை நடாத்த தயாராக இருப்பதாகவும் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். ஆரம்பத்­தில் இதில் உள்நோக்கம் இருக்கும் என்றும் தம்மை பிடிக்க விரிக்கும் வலை என்றும் நம்பி அசட்டையாக இருந்த ஜே.வி.பி.­யின் தலைமை, பின்னர் பேச்சுவார்­த்­தைக்கு தாம் தயாரென ரகசியமாக சிக்னல் கொடுத்தது. ”சலாகா” முதலாளி மற்றும் அமைச்­சர் தொண்டமான் ஆகியோ­ருரினூடாக இந்த முயற்சிகள் நடந்தன. முன் கூட்டியே செய்திருந்த ஏற்பாட்டின் பிரகாரம் 1989 ஒக்டோபர் 14ஆம் திகதி­யன்று ரம்பொட தோட்டத்­திலுள்ள தொண்­டமானின் வீட்டில் ஜே.வி.பி.யின் முக்கி­யஸ்தர் ஒருவர் மொழி பெயர்ப்பாளர் ஒருவ­ருடன் அரசின் பிரதிநிதியான தொண்டமா­னுடனான பேச்சுவார்த்தை ஆரம்ப­மானது. இச்சந்திப்பில் ஜே.வி.பி.­யினால் முன்வைக்­கப்பட்ட நிபந்­­தனைகளையும் முன்னேற்ற­த்தையும் ஜனாதிபதி பிரேமதாசவு­க்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார் தொண்­டமான். இப்பேச்சு­வார்த்தை பற்றி ஜே.வி.பி.­க்குள் முரண்பாடான கருத்தும் இருந்தது. குறிப்பாக அரசுடன் எந்த விதத்திலும் உடன்­பாடொன்று காண்பது தேவையற்றது என்ற கருத்து பலமாக இருந்தது. இதன் காரணமாக நவம்பர் 8ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திப் போடப்­பட்டது. இந்த 8ஆம் திகதிக்கும் 12ஆம் திகதி­க்குமிடையில் தான் ஜே.வி.பி.யின் தலைவர்கள் பலர் கைது செய்யப்­பட்டார்கள். இந்தப் பேச்சு­வார்த்தை தொடர்பாக இன்று தொண்ட­மானும் எதுவும் கூறப்போவதில்லை. ஜே.வி.பி.யும் இதனை ஒப்புக்கொள்ளப் போவதி­ல்லை. பிரேமதாசவும் உயிருடன் இல்லை. ஆனால் உள்ளளவில் தொண்ட­மானுடனான இப்பேச்சுவா­ர்த்தை தான், தமது தலைவர்கள் வலையில் அகப்பட காரணமாக இருந்திரு­க்கிறது என்பதை கட்சியின் தலைவர்கள் பலர் நம்பி வருகிறார்கள்.


அரசு விரித்த வலையும் காட்டிக் கொடுப்பும்

இந்த நிலையில் தான் டீ.எம்.­ஆனந்த கைது செய்யப்பட்டார்.

ஜே.வி.பி.யின் தலைமையை ஒழித்துக் கட்டுவதாயின் அதன் தொடர்பு வலைப்பின்­னலை தேடிக்­கண்டு பிடிக்க வேண்டும் என ஒப்பரே­ஷன் கம்பைன்ஸ் தீர்மானித்திருந்­தது. அதன்படி ஏலவே கிடைத்தி­ருந்த தகவல்களின்படி மூவர் இலக்கு வைக்கப்­பட்டனர். சோமவங்ச அமர­சிங்க, கதுருபொ­குணு மற்றும் டீ.எம்.ஆனந்த ஆகியோரே அவர்­கள். கதுருபொகுணுவுக்கும் ஆனந்தவுக்குமிடையி­லான தொடர்பு ஆனந்த­வின் டிரைவருக்கூடாக நடப்பதாகத் தெரிய வந்தது. பிலியந்தலையில் வைத்து கதுரு­பொகுணு பிடிக்கப்பட்டார். அவரின் தகவ­லின் பின்னர் தான் டீ.எம்.­ஆனந்த கொழும்பு மாவட்ட ஜே.வி.பி.யின் தலைவர் எனப் பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரியவந்தது.

படையினரின் அடுத்த நாடகம் ஆரம்ப­மானது. கதுருபொகுணு­வுடன் வேடமணி­ந்து சென்ற இராணுவ கப்டனை டீ.எம்.ஆன­ந்தவின் டிரைவ­ரிடம் அவர் தலைவரிட­மிருந்து ரகசிய தகவல் ஒன்றை கொண்டு வந்திருப்பதாகவும் ஆனந்தவிடம் இதனை ஒப்படைக்க அழைத்துச் செல்லும்படியும் கேட்கவே, அவரும் தெமட்டகொடைக்கு அழைத்துச் சென்றார். இலகுவாக படையின் வலையில் சிக்கிக் கொண்ட ஆனந்தவை மூன்று நாட்களாக கடும் சித்திரவதை செய்து உண்மை­யை கக்க வைத்தனர். ஜே.வி.பி.­யின் தொடர்புகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன. அவர் வெளியிட்­டிருந்த தகவல்களின்படி முதலில் பண்டார­வளையில் ரெஜி­னோல்ட் பெட்ரிக் எனும் பெயரில் இருந்து வந்த சோமவங்ச அமரசி­ங்க தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்­தனர். ஆனால் அதற்குள் சோமவங்ச அமரசிங்க தப்பிப் போயிருந்தார். வீட்டை சல்லடை­போட்டு தேடிப் பார்த்ததில் ஆதார­ங்கள் எதுவும் மிஞ்சியிருக்க­வில்லை.

பல்லேகல படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆனந்­தவை மீண்டும் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயற்சி­த்தனர். water treatment எனப்படும் தலைகீழாக தொங்கவிட்டு தண்ணீரில் தலையை அமிழ்த்தி வதை கொடுத்தனர். இறுதியில் விஜே­வீரவின் இருப்பிடத்தையும் கக்கினார். எச்.பீ.ஹேரத் உட்பட இன்னும் பலரின் இருப்பிடங்க­ளையும் டீ.எம்.ஆனந்த வெளியிட்டிருந்தார்.


விஜேவீர பிடிபட்டமை

இத்தகவல் உடனடியாக தலை­மையக­த்துக்கு அனுப்பப்பட்டது. உலபனையில் அமைந்துள்ள விஜே­வீரவின் இருப்பிடத்­துக்குப் போகும் வழியை தெளிவாக ஆனந்தவுக்­கூடாக அறிந்து சென்றனர்.

ஒப்பரேஷன் கம்பைன் பிரிவிலி­ருந்து ஒரு படையணி விஜேவீரவை பிடிப்பதற்கென்று சென்றது.

சென்மேரி எஸ்டேட்டில் அமைந்­துள்ள அந்த பங்களாவின் சிகப்பு நிற வாயிற் கதவை தாண்டிச் சென்று கொண்டிருந்தது வாகனம். 1989 நவம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி. விஜேவீர வழமை போல தனது பிள்ளைகளுடன் ஒன்றாக மேசை­யில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி­ருந்தார். திடீரென நுழைந்த வாகனத்திலிருந்து வேகமாக இறங்கிச் சென்ற படையினர் வீட்டையும் விஜேவீரவையும் சுற்றி வளை­த்தனர். சூழ்ந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்ப முன்னமே விஜேவீர அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

”என்ன இது..? என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.”
”ரோகண விஜேவீர! சரணடை­ந்து விடு.”
”நான் விஜேவீர இல்லை. விஜேவீர என்பது யார்? உங்களது கணிப்பு தவறு என நினைக்கிறேன். நான் அத்தநாயக்க. நன்றாகப் பாருங்கள்.” இவ்வாறு கூறியதும் கேர்னல் சானக்க பெரேரா தனது 9 எம்.எம் பிஸ்டலை எடுத்துக் கொண்டு முன்னே பாய்ந்து விஜேவீர­வின் தலையில் பிஸ்டலை வைத்து...
”நீ விஜேவீர அல்லவா...?”

அதிர்ச்சியை வெளியே காட்­டாது அமைதியாக, விஜேவீர
”நீங்கள் கண்டியிலிருந்தா வருகிறீர்­கள்..?” எனக் கேள்வி எழுப்பினார்.
அது வரை இந் நபர் விஜேவீர தானா என்ற சந்தேகம் இருந்த படையினருக்கு இந்த கேள்வியும் அதன் தொனியும் தமது இலக்கு சரிதான் என்பதை நிரூபித்தது.

”நான் உங்களோடு வந்து விடுகிறேன் எனது குடும்பத்தவரை எதுவும் பண்ணி விடாதீர்கள்....” என்று கூறி விஜேவீர இராணு­வத்தின­ரின் யு.ஹ.368 இலக்க வாகனத்தில் ஏறினார். விஜேவீர இருந்த வாகன­த்துக்கு முன்னும் பின்னுமாக ஐந்து வாகனங்களில் படையினர் சென்றனர்.

வாகனம் கொழும்பு ஹெவ்லொக் டவுனில் அமைந்துள்ள ஒப்பரேஷன் கம்பை­ன்ஸ் தலைமையகத்தை அடைந்தது.


சித்திரவதை தொடக்கம்.

அன்று இரவு முழுவதும் விஜேவீர சித்திரவதைக்குட்படுத்தப்பட்­டார். எஞ்சிய­வர்கள் இருக்குமிடத்தைச் சொல்லுமாறு வற்புறுத்தினர். உண்மையில் விஜேவீரவு­க்குக் கூட ஏனையோரின் இருப்பிடங்கள் அனைத்தும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12.45 அளவில் இரு படையினர் விஜேவீரவின் குடும்ப புகைப்படமொ­ன்றைக் கொண்டு வந்து கொடுத்­தனர். இப்போதோ அடையா­ளம் கண்டு பிடிக்க முடியாதவகையில் தாடி மீசையில்லாமல் இருந்தார் விஜேவீர. அடுத்த நாள் காலை 9.30 அளவில் விஜேவீ­ரவின் விரல் ரேகைகள் பரிட்சிக்கப்பட்டடு அதன் முடிவு கிடைத்திருந்தது. அன்று முழுவதும் சித்திரவதை தொடர்ந்­தது. இதன் போது தான் ஜே.வி.பி.­யின் மத்திய குழு உறுப்பினர்களான கமநாயக்கவின் இருப்பிடத்தையும் ஏனையோரது விபரங்க­ளையும் விஜேவீர வெளியிட்டார் என அரச யந்திரத்தின் காவல் நாய்களான தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த போதும் அது பொய் என்பது பின்னர் தான் பலருக்குத் தெரிய வந்தது. கமநாயக்க பிடிபட்டிருந்த போது பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேர­த்ன வெளியிட்ட செய்தியி­லும் கமநாயக்கவை விஜேவீர தான் காட்டிக் கொடுத்ததாக தெரிவித்தி­ருந்தார். (15-11-1989 தினமின)


பிரேமதாசவின் உத்தரவு

இறுதியாக, மேஜர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன, பிரிகேடியர் சானக பெரேரா, பிரிகேடியர் லக்கி அல்கம, பிரிகே­டியர் ஜயசுந்தர, கேர்ணல் பலகல்ல, மேஜர் தோர­தெனிய, மேஜர் உடுகம்பொல, கெப்டன் கபூர் ஆகியேர் விஜேவீ­ரவை என்ன செய்வது என்பது பற்றிக் கலந்துரை­யாடினர். பின்னர் அதைப் பற்றி ரஞ்சன் விஜேரத்னவுடன், சிசில் வைத்தியரத்னவும் வேறு சில அதிகாரிகளும் கலந்துரையா­டினர். இது பற்றி கெசல்வத்தை (வாழைத்­தோட்டத்தில்)யில் ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இருந்த ஜனாதிபதி பிரேமதாச­வுடன் தொடர்பு கொண்டு முடிவைக் கேட்டனர். அரசியல் ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை தான் கவனித்துக் கொள்வ­தாகவும் நேரத்தைக் கடத்தாமல் உடனடி­யாக விஜேவீரவை முடித்து விடும் படியும் கெசல்வத்தையிலிருந்து தகவல் வந்தது.

அதன்படி விஜேவீரவை கொல்லும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபூர், கேர்ணல் தோரதெனிய மற்றும் லெப்டினென்ட் கேர்ணல் ஒருவருக்கும் அளிக்கப்­பட்டது.

அதுவரை விஜேவீர பிடிபட்ட தகவல் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டிரு­ந்தது. கேள்விகள் பல கேட்கப்பட்டன. அவற்றுக்கு அமைதியாக பதிலளித்தார் விஜேவீர. இறுதியில் ஒரு கடதா­சியை வாங்கித் தனக்குள் படித்தார். பின் அதிலு­ள்ளபடி வீடியோ முன்னிலையில் உரையா­ற்றப் பணிக்­கப்பட்டார். மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன. ”கமநாயக்க எங்கே?” என கேட்ட கேட்டபோது.

”அப்படியான கேள்விகள் கேட்பது அர்த்தமற்றது” என விஜேவீர பதிலளித்­தார். அன்றிரவு 10.45 வரை கேள்விகள் கேட்கப்­பட்டன. அப்போது பாதுகாப்ப­மைச்சர் ரஞ்சன் விஜேரத்னவும் வந்து சேர்ந்திருந்தார். 15 நிமிடங்கள் ரஞ்சன் விஜேரத்ன அவருடன் உரையாடியிருக்கி­றார்.


விஜேவீர பிரிந்தார்.

விஜேவீரவை யு.ஹ.601 இலக்க இராணுவ வாகனம் ஏற்றிக்­கொண்டு புறப்பட்டது. பொரல்லையில் காசல் வீதிக்கு அருகில் உள்ள கோ­ல்ப் மைதானத்தில் இலக்கம் 6 குழியரு­கில் வாகனம் வந்து தரித்தது.

பெரிய மரத்தினடியில் ரோகன விஜேவீர கொண்டு செல்லப்படடார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறியாமலிருக்க நியாயமில்லை.

”இவனை உயிரோடு கொளுத்து­வோம்” என ஒரு படையினன் கூறினான்.

”இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறாய், மரண பயம் உன்னை ஆட்கொள்ளவில்லையா...?”

”இல்லை அப்படியொன்றையும் உணரவில்லை. நான் எப்போதும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு தான் எனது கடமைகளை செய்து வந்திருக்கிறேன். எனது மரணம் எப்போது எங்கே நடக்கும் என்பதை மட்டும் தான் அறியாமல் இருந்தேன்....”

தன்னால் எதிர்த்தாக்குதல் நடாத்த முடியாத நிராயுதபாணி­யாக இருக்கும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை அடி உதை போன்ற வதைகளுக்கு முகம் கொடுத்த நிலையில், அந்த வலி கூட மாறுமுன்னர் தனது இறுதி நேரம் கிட்டிவிட்டது என்பதை தெரிந்த நிலையிலும் - ஆயுதமுனை­யில் அளிக்கப்பட்ட இந்த பதில் நிச்சயம் அந்த கொலைஞர்களைக் கூட ஆச்சரியப்பட வைக்காமல் இருக்க முடியாது.
கைத்துப்பாக்கியை எடுத்து முதலாவதாக சுட்டவன் கபூர், விஜேவீர அப்படியே சாய்ந்தார். துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

”ஹாங்...ஹாங்... டக்கென்று முடி...”

சிங்களத்திலும் ஆங்கிலத்­திலும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தோரதெனிய தனது கைத்துப்பாக்­கியால் விஜேவீரவின் நெஞ்சை தோட்டாக்கள் முடியும் வரை சுட்டுத் தள்ளினான். ரோகன விஜேவீர துடிதுடித்துக்கொண்டிருந்தார். விடியற்காலை 3.00 மணிக்கு அந்த உடல் மைதானத்தக்கு பின்னால் அமைந்திருந்த பொரல்லை கனத்­தை மயானத்துக்கு அதே வாகனத்­தில் எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கெனவே அந்த வானத்தில் எச்.பீ.ஹேரத்தின் பிரேதமும் கிடந்தது.

இரண்டு பிரேதமும் பொரல்லை மயானத்தில் கேஸ்ஸில் எரிக்கப்­பட்டன. எரிக்கும் கருவிக்குள் விஜேவீ­ரவின் உடல் தூக்கிப் போடப்­பட்டபோது அவரது உயிர் முற்றாக போயிருக்கவில்லை.


அரசின் பொய்ப் பிரச்சாரம்

விஜேவீரவை இத்தனை பயங்க­ரமாக, இரகசியமாக படுகொலை செய்த அரசாங்கம், விஜேவீரவை நவம்பர் 10ஆம் திகதியே கைது செய்திருந்த போதும், விஜேவீரவை கொலை செய்த அடையாளங்கள் முழுவதையும் அழித்ததன் பின்னர் தான் (13ஆம் திகதி) அது பற்றிய தகவலை அறிவித்தது. 14ஆம் திகதியன்று சகல பத்திரிகைகளி­லும் இதுபற்றிய தலைப்புச் செய்தி­கள் வெளியிடப்பட்டிருந்தன. பாது­காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி இத்தகவல்களை வெளியிட்டிருந்­தார். அத்தகவல்கள் அடுத்த நாள் பத்திரிகைகளில் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தன.

” மக்கள் விடுதலை முன்னயின் தலைவர் ரோகண விஜேவீர நேற்றைக்கு முன்தினம் கம்பொல-உலபனவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள ஜே.வி.பி.யின் தகவல் மத்திய நிலையத்தை காட்டுவதற்கு வந்து கொண்டிருந்த போது அதே வாகனத்தில் கொண்டு வரப்பட்ட எச்.பீ.ஹேரத் படையின­ரின் துப்பாக்கியைப் பறித்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார். ஹேரத்தை படையினர் சுட்டதில் ஹேரத்தும் கொல்லப்பட்டார். அவசரகால சட்டத்தின் கீழ் அவர்களது இறுதிக் கிரியைகள் இராணுவத்தால் செய்து முடிக்கப்­பட்டது.” இதன் மூலம் அரசாங்கம் ”விஜேவீரவை பிடித்து விட்டோம். அவர் தனது ஏனைய தோழர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொ­டுக்க முயற்சித்த போது அவரது தோழர் ஒருவராலேயே கொலை செய்யப்பட்டார். நாங்கள் கொல்ல­வில்லை.” என்பதையே சாதிக்க விரும்பியது. ஆனால் பொதுவாக அரசின் இந்த கூற்றை பொது மக்கள் நம்பியிருக்கவில்லை.

விஜேவீர கொல்லப்பட்ட இரகசி­யம் முதன் முதலில் பாராளுமன்றத்­தில் தான் அம்பலமானது. ஆனால் அதனையும் பல வதந்திகளில் ஒன்றென்றே பலர் கருதினர்.

கொலைப்பற்றி பாராளுமன்றத்தில்

1990 ஜனவரி 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஹலீம் இஷாக் எம்.பி. பாதுகாப்பு அமைச்சரை நோக்கிப் பின்வரும் கேள்விகளை கேட்டார்.

”..நீங்கள் அவரைக் கொன்றீர்­கள். கோல்ப் மைதானத்திற்கு கொண்டு வந்தீர்கள். 3.30 அளவில் இலக்கம் 6 கோல்ப் குழியினருகில் வைத்து கொன்றீர்கள்...”

”அப்படியென்றால் நீங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறையின் அறிக்கையை நம்பவில்லையா...” என ரஞ்சன் விஜேரத்ன கேட்டார்.

”நீங்கள் விஜேவீரவைப் பிடித்து ஒப்பரேஷன் கம்பைன்ஸ் தலைமை­யகத்துக்கு கொண்டு வந்து விசாரி­த்து விட்டு, கொன்ற விடயங்கள் பொய்யில்லை... மோடல் பாம் வீதியில் வதியும் கோல்ப் கிளப் ஊழியர்கள் இச்சம்பவத்தைக் கண்டுள்ளனர் ”என்றார். இதே விடயத்தை ஏற்கெனவே (1989 டிசம்பர் 4ஆம் திகதி) தகவல் குறைவாக என்றாலும் லக்ஷ்மன் ஜயக்கொடியும் அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். (ஹன்சா­ர்ட் - டிசம்பர் 4 1989 பக்கம் 933, 934, 1990 ஜனவரி 12 . பக்கம் 556-569)

ஜே.வி.பி. 1994 இன் பின்னர் மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வந்ததிலிருந்து இது வரை விஜேவீர­வின் கொலை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரவென ஒரு ஆணை­க்குழு விசாரணையை ஆரம்பிக்கு­மாறு பல தடவைகள் அரசாங்கத்­தைக் கோரியிருந்தது. ஆனால் இது வரை அப்படி எதுவும் விசாரிக்கப்­படவில்லை. மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ, ஸ்ரீமணியின் கணவர் லலித் அத்துலத் முதலி, ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜேகுமார­ணதுங்க ஆகியோர் கொல்லப்பட்­டமையை விசாரிக்கவென ஆணை­க்குழுக்கள் அமைக்கப்பட்ட போதும், அரசியல் இயக்கமொன்­றின் தலைவரது ரகசியம் நிறைந்த படுகொலையை விசாரிக்க எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்? ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதி­பதித் தேர்தலின் போது தனது பிரச்சாரத்துக்கென தனது புகைப்­படத்துடன் விஜேவீர, விஜயகுமார­ணதுங்க, கொப்பேகடுவ, பிரேமதாச என எல்லோரது புகைப்படங்க­ளையும் போட்டு போஸ்டர் ஒட்டியி­ருந்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் கொல்லப்பட்டமை பற்றி விசாரணை செய்வதாகவும் வாக்கு­றுதி அளித்திருந்தார். இன்று ஏனைய அனைத்து வாக்குறுதி­களைப் போலவே இதுவும் போலி வாக்குறுதியாகப் போனது.

ஆனால் இந்த அரசாங்கமும் இன்று ஜே.வி.பி.யின் நடவடிக்­கைகளை ஆராய்வதற்கென விசேட பிரிவொன்றை 1995ஆம் ஆண்டு உருவாக்கி ஜே.வி.பி.யின் நடவடிக்­கைகள் பற்றியும் அதன் அங்கத்த­வர்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போதைய ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ஷ ”இனி ஒரு போதும் ஜனநாயக பாதையை விட்டு விலகிப் போவதில்லை என்றும் பாராளுமன்ற வழிமுறையில் தாங்கள் இயங்கவே விரும்புவதாகவும் கருத்து வெளியி­ட்டிருக்கிறார். இது ஒரு வித தந்தி­ரோபாய கருத்தாக இருந்தாலும் யாருக்கு தந்திரோபாயம் என்ற கேள்வி எழுகின்றது. (அரசுக்கு இந்த பாட்சா எல்லாம் பலிக்காது.) மக்களுக்கு தமது வேலைத்திட்டம் பற்றி என்ன கூறப் போகிறார்கள் என்பதும், என்ன அடிப்படையில் அணிதிரட்டப் போகி­றார்கள் என்றும் கேள்வி எழுகி­ன்றது. கொல்லப்பட்ட ஆயிரக்­கணக்கான கட்சித் தோழர்கள் தங்களை தியாகம் செய்தது எதற்கு என்ற கேள்விக்கு ஜே.வி.பி.யால் என்ன பதில் கூற முடியுமோ தெரியாது?

(97ஆம் ஆண்டு சரிநிகரில் வெளியான இக்கட்டுரை நிறப்பிரிகை மற்றும் வேறு சஞ்சிகைகள் பலவற்றிலும்  மறுபிரசுரம் செய்யப்பட்டது)

ஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும்! ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)






சமூகத்தின் மோசமான ஏற்றத்தாழ்வுகளை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதிலும், அதற்கான காரணங்களை விரிவாக விளக்குவதிலும் மாற்றத்திற்கான வழிமுறைகளை மொழிவதிலும் ஜே.வி.பி. மிகவும் திறம்படச் செயலாற்றியதாகச் சொல்லப்படுகிறது. கூடவே ரோஹண விஜேவீரவின் எழுத்துக்கள் சிந்தனையை கிளறுவனவாகவும், பேச்சுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாகவும் இருந்தன. இவ்வாறெல்லாம் இருந்தும் 1971, பின்னர் 1989 என்று இரு காலட்டத்திலுமே ஜே.வி.பி. தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று நினைக்கிறீர்கள்?

முதலில் இந்த சமூக அமைப்பே பிழையானது என்பதை இனங்காண்கிறோம். எனவே இதனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். அதனூடாக சமவுடமைச் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் வேண்டும். அதைச் செய்வதற்கு முன் நிபந்தனையாக பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். இதற்காக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடில்லாது ஒரு கட்சியின் கீழ் அணிதிரள வேண்டும்.

65களில் இலங்கையில் சரியான ஒரு மார்க்ஸிய அமைப்பொன்று இருக்கவில்லை. எனவே நாங்கள் மக்களை மார்க்ஸிய வழியைக் காட்டி கட்சியை நோக்கி அணிதிரட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்தோம்.. அதற்காகவே தோழர் ரோஹண விஜேவீர தலைமையில் இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் அரசியல் வேலைகளை நாடு பூராவும் மேற்கொண்டோம். மக்கள் பெருவாரியாக அணி திரண்டனர். அப்போதுதான் இதனை முதலாளித்துவ வர்க்கம் முதற் தடவையாக இனங்காண்கிறது. பாட்டாளி வர்க்கம் சுயமாகவே அணிதிரள்கின்றது. அவர்களுக்கென்று கட்சியொன்று உருவாக்கப்படுகின்றது. இது தமக்காபத்தானது என்று. எனவே இக்கட்சியின் உருவாக்கத்தை விரும்பவில்லை. என்றாவது இக்கட்சி முதலாளித்துவ வர்க்கத்தை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடுமென்பதை அது உணர்ந்தது. 1969இலிருந்து எங்களை அடக்குவதற்கான முயற்சிகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிதான் அடக்கு முறைக்கான நியாயங்களை கற்பித்துக் கொண்டிருந்தது. எங்கள் இளைஞர்களை ஏமாற்றும் சீ.ஐ.ஏ கும்பல் என்று பிரச்சாரம் செய்தது. தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகினோம். குறிப்பாக எங்கள் உறுப்பினர்கள் அரசியல் வகுப்புகள் எடுக்கின்ற இடங்களுக்கு புகுந்து அவர்களை கைது செய்யத் தொடங்குகின்றனர். 1970 மே மாதத்தில் ஐ.தே.க. அரசாங்கம் தோழர் ரோஹண விஜேவீரவை கைது செய்தது. அதே காலப்பகுதியில் ஆட்சி மாற்றமும் ஏற்படுகின்றது. தேர்தலில் ஐ.தே.க. தோல்வியுற்று ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கமர்கிறது. அக்காலப்பதியில் ஐ.தே.க. வை விட ஐக்கிய முன்னணி ஜனநாயக உரிமைகளை ஓரளவு வழங்கக் கூடிய அமைப்பு என்கிற நம்பிக்கை இருந்ததால் மக்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்டிருந்தோம். எனவே ஜே.வி.பி.யின் ஆதாரவு ஒத்துழைப்புடனேயே ஐக்கிய முன்னணி பதவிக்கமா்ந்தது ஆனால் ஐக்கிய முன்னணி பதவிக்கமர்ந்ததன் பின் தொடர்ந்து ஜே.வி.பி.யின் அரசியல் வேலைகளை அடக்குகின்ற முயற்சிகளைத் தொடர்ந்தது. 1970இல் ஜே.வி.பி.யை அடக்குவதற்காக ஐ.தே.க.வால் உருவாக்கப்பட்டிருந்த 'சேகுவேரா பியுரோ' ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் விரிவாக்கப்படடது. அடக்கு முறைகள் தொடர்ந்தன. நாங்கள் அதுவரை ஆயுத ரீதியான அரசியல் வேலைகளை முன்னெடுத்திருக்கவில்லை எங்களிடம் ஆயுதங்களும் இருக்கவில்லை. அதற்கான உடனடித்தேவைகளும் இருக்கவில்லை.

1970 ஓகஸ்டில் நாம் பகிரங்க அரசியலுக்கு வருகிறோம். ஓகஸ்ட் 10ம் திகதி எமது முதல் பகிரங்க கூட்டத்தை 'ஹைட்பார்க்கில்' நடத்தினோம். இரண்டே நாட்களில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜ்குமார் இரத்தினவேல் அறிக்கையொன்றை வெளியிட்டார். அவ்வறிக்கை 13ம் திகதி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதில் ” நாட்டில் வேகமாக பரவிவருகின்ற சேகுவரர் இயக்கமானது அரசாங்கத்தின் பிரதான எதிரி. அதனை துரத்தி வேரோடு அழிக்க வேண்டும்.” என அதில் காணப்பட்டது. அப்படியான ஒரு அறிவித்தல் விடுக்கக் கூடியளவிற்கான சூழலொன்று அன்று இருக்கவில்லை. அரசாங்கத்துக்கெதிரான எதையும் நாங்கள் செய்திருக்கவில்லை. (அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக நாங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம்.) எங்களது கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்திருந்தோம்.

அடக்குமுறைகள் தொடா்ந்தன. 1971ல் இவ்வடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. 1971ல் மார்ச் 6ம் திகதியன்று ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்கா உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தர்மசேகர எனும் இடதுசாரி வேடம் பூண்ட ஒரு நபரின் கும்பலே அதைச் செய்திருந்தது. இக்கும்பலுக்கும் அரசாங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. இதைப் பயன்படுத்தி தனது அடக்குமுறையை புரிவதற்காக அரசு அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்தது. எமது உறுப்பினர்களை கைது செய்வது அதுகரித்தது. எனவே எங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்த கும்பலாக தர்மசேகரவின் கும்பல் இனங் காணப்பட்டது. இது அரசாங்கத்தின் திட்டமாகவே இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதுவரை அரசாங்கம் தர்மசேகரவை கைதுசெய்யவில்லை.

அதன் பின்னர் 1971மார்ச் 13ம்திகதியன்று தோழர் ரோஹண விஜேவீரவையும் இன்னும் சில தோழர்களையும் பொலிசார் கைது செய்தனர். யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைத்திருந்தனர். அது வரை நாங்கள் ஆயுதபாணிகளாக இருக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் மார்ச் 16ல் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. அச்சட்டத்தின்படி மரண பரிசோதனையின்றி ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க முடியும். அரசாங்கம் கூடிய விரைவில் கட்சியின் மீது பேரழிவை ஏற்படுத்தவிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்படியான அநாதரவான பிணம் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இவ்வாறான சட்டமொன்றை கொண்டு வந்துள்ளது. அதன் நோக்கம் தான் கொன்று போடப்போகின்றவர்களது சடலங்களை எவரது அனுமதியின்றி அழித்து விடுவதற்காகவே என்பதை உணர முடிந்தது. நிராயுதபாணிகளான எங்கள் மீது இப்படியான படுகொலைகளை செய்யவிருப்பதால் அப்படி நாங்கள் இறப்பதை விட அதே அடக்குமுறைக்கு எதிராக போராடி மரணிப்பது மேல் எனத் தோன்றியது. அதன் விளைவாகவே ஏப்ரல் கிளர்ச்சி உருவானது.

தோழர் விஜேவீர கூட எல்லோரையும் பின் வாங்கும் படியும் அடக்குமுறையிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார் ஆனால் அன்று கட்சியிருந்த நிலை காரணமாகவும் அடக்குமுறையின் அதிகரிப்பினாலும் இன்னமும் தப்பமுடியாது என்கின்ற காரணத்தால் தற்காப்புக்கான போராட்டத்தை நடத்த வேண்டியேற்பட்டது. எனவே 71கிளர்ச்சியானது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே அல்ல. அது முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காக அடக்குமுறைக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமே.

அரசின் பாசிசத்திற்கு பதிலாக பாசிச வழிமுறையையே ஜே. வீ .பி கைக்கொண்டதும் ஜே.வி.பி மக்களிடமிருந்து அந்நியப்படக் காரணமல்லவா?


எங்களிடம் ஒரு போதும் பாசிசப் போக்குகள் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. அந்த நேரத்தில் ஆயுதப் படையினரின் எங்களுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருந்தது. அதை இந்த அரசு இனங் கண்டது. எனவே இராணுவத்தின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகவே எங்களுடன் தொடர்புற்றிருந்த மற்றும் ஆதரவளித்த இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரிகளையும் கொல்லத் தொடங்கியது. தற்போது நடத்தப்பட்டு வரும் பட்டலந்த விசாரணைக் கமிஷனின் விசாரனணயிலும் கூட அவ்வகையான சம்பவங்கள் நிருபணமாகியிருக்கிறது. அந்த நேரத்தில் இராணுவத்திலிருந்து அனைவரும் விலகுங்கள் விலகாதவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டர் கூட நாங்கள் ஒட்டியதல்ல. அது இந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியென்றே நாங்கள் நம்புகிறோம். இது மக்கள் விரோத அரசாங்கம் இந்த அரசாங்கத்தை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் என்று தான் கூறியிருந்தோம். அரசாங்கத்துக்கு இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாது போன சந்தர்ப்பத்திலேயே இராணுவத்திலுள்ளவர்களையும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவத்திலுள்ளவர்களையே கொன்றொழித்தது.

ஆனால் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்ட பொலிஸ் ஆயுதப் படையினரின் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெளிவந்திருந்ததே?

ஓமோம், எத்தனை புள்ளிவிபரங்களையும் காட்டலாமே. இக்காரியங்கள் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களாலும் செய்யப்பட்டிருக்கலாம். அந்தகாலப் பகுதியில் RDF, High Section, CSU போன்ற எத்தனையோ ஆயுதக் குழுக்கள் இருந்தன. நள்ளிரவில் தம்மைச் சுட்டவர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்பது அன்று இராணுவத்திலுள்ளவர்களுக்கே தெரியாது. தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் எங்களாலும் உண்மையை நிரூபிக்கக்கூடிய சூழலும் அன்று இருக்கவில்லை.

முதாலாளித்துவ பாராளுமன்றங்களே முதலாளித்துவ வர்க்கத்துக்கு சார்பாக சட்டமியற்றும் வேலைகளையே எப்போதும் மேற்கொள்ளும். ஆனால் புரட்சி என்பதோ ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். இவ்வடிப்படையில் ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் பங்குபற்றியுள்ளது. இது இம்முதலாளித்துவ நிறுவனங்களில் இருப்புக்கு துணை போவதாகாதா?

ஆம், இந்த முதலாளித்துவ அரசாங்கம் தனது இருப்புக்கு பயன்படுத்தி வரும் ஒன்று தான் பாராளுமன்றம். ஆனால் பாராளுமன்றத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் உள்ள நன்மை தீமை என்னவென்பதனைக் கூட அவர்கள் அறிய வழியில்லை. அதற்கான காரணம் பாராளுமன்றத்தில் நடப்பதைப்பற்றி தெளிவுபடுத்த இந்த நிறுவனத்தில் உள்ள எவரும் முன்வருவதில்லை. பாராளுமன்றம் இந்த இயல்பைத்தான் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்கின்ற புரட்சிகர சக்தியொன்று இந்நிலைமைக்கேற்ப தங்கள் செயற்பாடுகளையும் செய்வது அவசியம். லெனின் கூட சொல்கிறார் புரட்சியாளர்கள் முதாலாளித்துவ பாராளுமன்றத்தைப் பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டிவரும் என்று.

இன்று எங்களுக்கென்று ஒரு உறுப்பினர் இருக்கின்றார். இவரால் முதலாளித்துவ பாராளுன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்த முடிகிறது. அதனது மக்கள் விரோத செயற்பாட்டிற்கெதிராக வாக்களிக்க முடிகிறது. தற்போது தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்த்து வாக்களித்து வரும் ஒரே ஒரு எம்.பி. தோழர் நிஹால் கலப்பதி மட்டுமே. இன்று தமிழ் மக்களை கொல்வதற்காக அனுமதியளிக்கின்ற இச்சட்டங்களை ஆதரித்து தமிழ் எம்.பிக்கள் அனைவருமே வாக்களிக்கிறார்கள். வெளியில் வந்து தமிழ் மக்களின் வீரர்களாகின்றார்கள்.

தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்கு ஆயுதம் வாங்குவதற்கான பாதுகாப்பு நிதியத்தை தோற்றுவிப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது கூட தமிழ் எம்.பிக்கள் உட்பட எல்லோருமே அதரவளித்தார்கள். நிஹால் கலப்பதி மட்டுமே அதனை எதிர்த்திருந்தார்.

இப்படிச் சொல்வோமே. சாக்கடைக் குட்டை உள்ளது அதைச் சுத்தம் செய்யவேண்டுமென்றால் அதில் இறங்காமல் சுத்தம் செய்ய முடியாது. நாங்கள் அந்த சாக்கடைக்குள் இறங்கியது அந்த சாக்கடையில் கிடப்பதற்கல்ல. அதன் அசுத்தத்தை நீக்குவதற்கே.

எனவே ஒரு புரட்சிகர சக்தியொன்றை மக்கள் ஏற்க வேண்டுமென்றால் இந்த அமைப்பு முறைக்குள் இருக்கின்ற விஷ்மகர சக்திகளை இனங்காட்ட வேண்டும். அவற்றை செய்ய இந்த நிறுவனங்களைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். பாராளுமன்றம் மாத்திரமல்ல மாகாணசபை , நகரசபை , கிராமிய சபைகள் உட்பட எல்லாவற்றிற்கூடாகவும் இயங்குதல் அவசியம். இந்தப் பாராளுமன்றத்தை சரிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்குள்ளே உள்ள பிழைகளை அம்பலப்படுத்தி சரியான அமைப்பைக் கட்டுவதே எங்கள் நோக்கம்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பியினரிடையே எப்போதும் தவறான அணுகுமுறையே காணப்படுவதாக சொல்லப்படுகிறதே?

சிலவேளை நாங்கள் முன்வைத்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்களது கருத்தாக அது இருக்கக்கூடும். நாங்கள் இனப்பிரச்சனை தொடர்பாக விஞ்ஞான ரீதியில் இனவாதமற்ற ரீதியில் மார்க்சிய பார்வையிலேயே செயற்பட்டு வருகிறோம். சிங்கள இனவாதத்தையோ நாங்கள் சார்ந்தவர்கள் அல்ல.

ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புகளில் ஒன்றான இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கீழ் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படையாகப் பிரசாரப்படுத்தி வந்துள்ளதே?

இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பிலான வகுப்பொன்று எடுக்கப்பட்டது என்பது உண்மையே ஆனால் இங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவழியினருக்கு எதிரான கருத்துக்களை அது கொண்டிருக்கவில்லை. அது தப்பான பிரசாரம். ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தினோம்.



மாகாணசபை வடக்கு கிழக்கு இணைப்பு யாவுமே நாட்டைத் துண்டாடுகின்ற முயற்சி என்று ஜே.வி.பி பிரசாரம் செய்கிறதே?

இந்தப் பிரச்சனையை தோற்றுவித்தது முதலாளித்துவ முறைகளே அதே முதலாளித்துவம் இன்று தீர்வையும் சொல்லுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பிரச்சனைக்கு இதே வர்க்கத்தால் தீர்வுகாண முடியுமென நாங்கள் நம்பவில்லை. அதே போல் மக்களை பிரிப்பதனூடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இந்த முதலாளித்துவ முறைமையே தமிழ் மக்களை ஒடுக்கியதென்றால் பிரிந்து போனதன் பின்னும் அதே முறைமையின் கீழ் தமிழ் மக்கள் ஒடுக்கப்படாமலா இருக்கப் போகிறார்கள். இப்படி கூறுவோமே ஐ,தே.க, ஸ்ரீ.ல.சு.க.வுக்கு பதிலாக தமிழர் விடுதலை கூட்டணியை ஆட்சியில் அமர்த்தி விட்டால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடுமா? தமிழ் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வுகள் இல்லாமல் போயுள்ளது. இருசாராரிடமும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. பிரிந்து போவதனூடாக இருசாராரையும்இணைக்க இயலாது போய்விடும். எனவே தான் நாங்கள் கூறுகிறோம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை சேர்ந்து வாழவிடாமல் செய்கின்ற இந்த முதலாளித்துவ முறைமையை விரட்ட வேண்டும். ஒன்றாக வாழக் கூடிய சமதர்ம சோசலிச சமுதாயமொன்று உருவாக்கப்பட வேண்டும். அக்காரியத்தை செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். எனவே தமிழ், முஸ்லிம் தனியரசுக்கான போராட்டத்துக்குப் பதிலாக ஒன்றாக வாழக்கூடிய சோசலிச அரசுக்கான போராட்டத்தை செய்ய எங்களுடன் இணையுங்கள்.

இன்று தமிழ் மக்களது பிரதானமான ஒடுக்கு முறை இன ஒடுக்கு முறையாக உள்ளது. அவர்கள் நேரடியாக அதற்கு முகம் கொடுக்கின்ற போது அது தொடர்ந்து நிலவுகின்றவரை வர்க்க ரீதியான அணிதிரட்டல் சாத்தியமில்லை என்கின்ற நிலையில் முதலில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது முன்நிபந்தனையாக உள்ளது இது தொடர்பாக ஜே.வி.பியினது நிலைப்பாடு என்னவாக உள்ளது?

தமிழ் மக்களுக்கென்று விசேடமான பிரச்சனை இருக்கிறதென்பதில் எங்களுக்கு இருவேறு கருத்தில்லை. அவர்களின் பிரச்சினைக்கு விசேட கவனம் செலுத்த வேண்டுமென்பதில் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால் இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் அதை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதே எங்கள் கேள்வி. தனியான தேசக் கோரிக்கை என்பது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் தேவையே. தமிழ் மக்களது மட்டுமல்ல முஸ்லிம், சிங்கள மக்களது பிரச்சினைகளுக்கும் கூட மக்கள் அரசாங்கமொன்றினாலேயே தீர்வை வழங்க முடியும்.

ஒரு சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்துவிட்டால் மட்டும் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இன்று ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வே உள்ளது இப்படிக் கூறுவோமே தொழில் புரியக்கூடிய வயதுடையவருக்கு தொழில் வழங்க இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் முடியாது எனவே ஒரு விகிதாசாரத்தை பின்பற்றுகிறது. தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்கின்ற ரீதியில் இதை வகுக்கிறது. உயர் 
கல்வியில் சித்தியடைந்த எல்லோருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. எனவே இவ் விகிதாசாரத்தை பேணுகிறது. ஆகவே முதாலாளித்துவத்தால் இந்த பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சோஷலிசம் வந்தவுடன் தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள் என்கிற பாரபட்சம் இல்லாது தகுதியுள்ள எல்லோருக்குமே இதை வழங்க முடியும். மொழி தொடர்பாக பிரச்சினை இல்லை. எனவே அரச சேவைகளுக்கு சிங்கள மொழி கட்டாயம் என தமிழ் மக்களிடம் கேட்கப் போவதுமில்லை சிங்கள மக்களிடம் ஆங்கிலம் கட்டாயம் என கேட்கப்போவதுமில்லை நியாய விலையில் நுகர்வுப்பொருட்கள் கிடைக்கும் என்றால் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் இருக்க வீடு கிடைக்கும் என்றால் இனப் பிரச்சினைக்கு இடமேயில்லை.

சோஷலிச சமூகத்தில் கூட இனப்பிரச்சனைக்கான சரியான தீர்வை காணமுடியாது போனதற்கான உதாரணங்கள் உள்ளதே ரஷ்யா உட்பட?

அது பிழையானது சோவியத் யூனியனில் ஸ்டாலினிசம் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய ஊடுருவல் காரணமாகவுமே சரியான முறையில் அவற்றைத் தீர்க்க முடியாது போனது.

அரசின் புதிய தீர்வு யோசனைகள் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன ?

நாங்கள் முற்றும் முழுதாக இத்தீர்வு யோசனைகளை எதிர்க்கிறோம். காரணம் மக்களை பேசும் மொழிகளுக்கு ஊடாக பிரித்து வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதே பொதியில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அசமத்துவத்தை நீக்குகின்ற எந்த ஏற்பாடும் இதில் இல்லை. குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்ற இவ்விசேட சலுகையை நாங்கள் எதிர்க்கின்றோம். இது அசமத்துவமான ஒன்றை சட்டபூர்வமான ஒன்றாக்கும் முயற்சியாகும்.

1987-1989 காலப்பகுதியில் ஜேவிபிக்கும் புலிகள் இயக்கத்திற்க்கும் தொடர்பு இருந்ததெனவும் இக்காலக்கட்டத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாக ஜே.வி.பி.யினரின் இருப்பிடங்களைப் புலிகள் காட்டிக் கொடுத்ததாகவும் ஜே.வி.பி.யின் லண்டன் கிளை பிரச்சாரம் செய்வதாக அறிகிறோம், அது உண்மையா?

ஜே.வி.பி.யின் ஒவ்வொரு கிளைக் காரியாலயங்களும் வெவ்வேறான கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்துவதில்லை. லண்டனில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் இது பிரச்சாரப்படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனாலும், புலிகளுக்கும் எங்களுக்கும் உத்தியோகபூர்வ தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால் எல்லா அரசியல் சக்திகளுடனும் உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடியிருக்கிறோம்.

ஜே.வி.பி. ஜனாநாயகம், சோஷலிசம் பற்றியெல்லாம் பேசியபோதும், அதன் தாபனச் செயற்பாட்டைப் பொறுத்தளவில் மத்திய குழு, பொலிட்பீரோ அங்கத்தினர் மட்டுமன்றி மாவட்ட அங்கத்தினர் கூட வீஜேவீரவின் தனிப்பட்ட நியமனங்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறதே?

எங்களை நோக்கி நேரில் இக்குற்றச்சாட்டை எவரும் முன்வைக்க மாட்டார்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலர் இருக்கிறார்கள். குற்ப்பாக 71 கிளர்ச்சியின் போது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் ஒழுங்கீனம் காரணமாக விலக்கப்பட்டவர்கள். இவர்கள் ஜே.வி.பி.யின் கருத்துக்களில் விமர்சனம் முன்வைக்க முடியாதவர்கள். எனவே அவர்கள் போன்றோர்தான் இப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். எங்கள் கட்சிக்குள் மத்திய குழுவுக்குள் வரும் வரையான நீண்ட ஒழுங்குமுறையொன்று ஆரம்பத்திலிருந்தே பேணப்பட்டு வருகின்றது. ஜே.வி.பி. தொடர்பான கருத்துச் சொல்வதற்க்கும், விமர்சனம் செய்வதற்க்கும் எல்லாவற்றுக்குமே சகலருக்கும் உரிமையுண்டு. ஒரு நபரின் சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதற்கு இக்கட்சியில் உள்ளவர்கள் என்ன மூடர்களா? எனவே அக்கருத்து பொய்யானது.

1994 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பகிரங்க அரசியலுக்கு மீண்டும் வந்த போது தம்மை சுயவிமர்சனத்துக்குள்ளாக்குவதாக வாக்குறுதியளித்திருந்தது என்றும், இவ்வாக்குறுதியை இன்னமும் செயற்படுத்தவில்லையென்றும் ஜே.வி.பி.யில் இருந்து ஒரு சாரார் கூறுகின்றனரே?

சுய விமா்சனம் என்பது செய்யப்பட வேண்டிதே. நாங்கள் இதற்கு முன்னரும் 1976இல் 71ஐப் பற்றிய சுயவிமர்சனம் செய்தோம்.1976ன் பின் இது வரை அப்படியொன்றும் செய்யப்படவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு சுய விமர்சனத்தை ஓரிரு வாரங்களில் நினைத்த படி செய்து முடிக்க முடியாது. அது மிகுந்த பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்று. இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தோழர் சோமவங்ச தவிர, இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே செய்ய வேண்டியிருக்கிறது. எனவே கட்சிக்குள் இதைப் பற்றிய தேடல்களை செய்து கலந்துரையாடியே செய்ய வேண்டும். சென்ற ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடத்திய கட்சி சம்மேளனத்தில் இது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதன்படி இவ்வருடம் யூன் மாதத்திற்குள் அண்ணளவான ஒரு சுயவிமர்சன ஆவணத்தொகுப்பொன்றை வெளியிடுவோம்.

அன்றைய புரட்சியாளர்கள் இன்று? 71 ஏப்ரல் புரட்சி 27 ஆண்டு நினைவு சுயவிமர்சனமின்றி புரட்சிகர பாய்ச்சலில்லை! லயனல் போபகேயுடனான நேர்காணல்






(நேர்காணல் - என்.சரவணன்.)


இலங்கையின் வரலாற்றில் சோஷலி­சத்தில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களின் ஆயுதந்தாங்­கிய முதற் புரட்சி 1971 இல் நடந்­தேறியது. நாடு முழு­வதும் ஒரே நேரத்தில் திடீரென்று தாக்குதல்­களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த அன்றைய சிறிமா அரசாங்­கம் கடும் கலக்கத்துக்­கு உள்ளாகி­யிருந்தது. அமெரிக்கா, எகிப்து, ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளின் இராணுவ உதவிகளோடு கொடூர­மாக இதனை அடக்கியது. ஏறத்தாழ 15 ஆயிரம் தொடக்­கம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்­பட்டனர். 50ஆயிரத்­திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதி­கள். சிறைச்சாலைக­ளுக்கும், தடுப்பு முகாம்களுக்­கும், வதைமுகாம்­களுக்கும் அனுப்பப்பட்டனர்.

இதனை விசாரிக்கவென்று 1971 மே 17இல் அமைக்கப்பட்ட விசேட குற்றவியல் ஆணைக்­குழுவின் முன் முக்கிய சந்தேக நபர்கள் 41 பேரின் மீது விசாரணை நடத்தப்பட்டது. 1974 டிசம்பர் வரை விசாரணை நடத்தப்பட்டது. 1977 பெப்ரவரியில் இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த 41 பேரில் 3 பேர் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்­களல்லர். விராஜ் பிரேம லக்பிரிய பெர்ணாண்டோ எனும் 17வது சந்தேக நபர் வெறும் ஆதரவாளராக இருந்து வந்தவர். வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் இன்று தனது பொறியியல் தொழிலை செய்து வருகிறார். 20ஆவது சந்தேக நபரான செமுவேல் டயஸ் பண்டாரநா­யக்க விடுத­லையானதும் ஸ்ரீ லங்கா சுந்ததிரக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 77ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளு­மன்றத்துக்­குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க.விலிருந்து ஆரியபுலே­கொடவுடன் விலகிக் கொண்டார். 24ஆவது சந்தேக நபரான சுசில் சிறிவர்தன ஆதரவாளராக மட்டுமே இருந்தவர். விடுதலையானதும் மாவத்தை எனும் மாற்று சஞ்சிகைக் குழுவில் பணியாற்­றினார். பிற்கால­ங்களில் வீடமைப்பு திணைக்களத்தில் உயர் பதவி வகித்து வந்த இவர் பின்னர் பிரேமதாசவின் ஜனசவிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பிரேமதா­சவின் மரணத்தின் பின் அப்பதவியிலிருந்து விலத்தப்பட்­டார்.

நான்கு சந்தேக நபர்கள் 71இல் கொல்லப்பட்டு விட்டனர். 33வது சந்தேக நபர் விஜேசேன வித்தாரண (சனத்) கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். அரசியல் குழுவைச் சேர்ந்த இவர் எல்பிட்டியவில் நடத்திய தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 34வது சந்தேக நபரான சுசில் விக்கிரம மாத்தறை கோட்டை­யைத் தாக்கிக்­கொண்டிருக்கை­யில் கொல்லப்பட்டார். 35வது சந்தேக நபரான சரத் விஜேசிங்க கேகாலை கெடியமுல்­லையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டார். அத்தாக்குதலுக்குப் பொறுப்பு வகித்தவரும் இவரே. 36வது சந்தேக நபரான மில்டன் கடவத்தை பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது பொலிஸாரினால் கொல்லப்பட்டார். அப்போது இவரு­க்கு வயது 20 கூட இல்லை. 41வது சந்தேக நபரான ஜே.ஏ.ஜி.ஜயக்­கொடி விடுதலை செய்யப்பட்டார். 37, 38, 39வது சந்தேக நபர்கள் முறையே டபிள்யு.டி.கருணா­ர­த்ன, ஹேவ பட்டகே பிரேமலால், நயணானந்த விஜேகுல­திலக்க ஆகியோர் காலம் பிந்தியே கைது செய்யப்பட்டனர். 1972 யூலை 22ஆம் திகதி விசார­ணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஆணைக்குழுவின் முன்னிலையில் 32 பேர் மீது மட்டுமே விசாரணைகள் அரம்பமானது. இவர்களில் பலரை பொலிஸார் வலுக் கட்டாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தி­த்தனர். ஆனால் அது சாத்தியப்­பட­வில்லை. தண்ட­னை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வந்த போது சிறைக்குள் நடந்த கருத்து மோதல் காரண­மாக விரக்தியுற்றும், சோர்வடைந்தும், நம்பிக்கையி­ழந்த நிலையிலும் பலர் ஜே.வி.பி.யை விட்டு விலகினர். அவ்வாறு விலகிய சிலர் முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். சிலர் தங்களது வர்த்தக, வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்­தனர். சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குப் பலியாகினர். 1971ஆம் ஆண்டு ஏப்ரல் புரட்சியின் 27ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஈடுபட்டவர்கள் குறிப்பாக அந்த 41 பேரில் இன்று எம்மால் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் இப்போது எங்கிருக்கி­றார்கள்? அவர்களின் அன்றைய பாத்திர­மென்ன? அவர்களின் இன்றைய கருத்துக்கள் என்ன? என்பது குறித்து தொடர்ச்சியான நேர்காணலை காணும் நோக்கில் இந்த இதழில் லயனல் போபகேயின் நேர்காணல் வெளியாகிறது.


லயனல் போபகே

”லய்யா” என அன்புடன் சக தோழர்களால் அழைப்பட்ட லயனல் போபகே. ஜே.வி.பி. இயக்கத்தின் முன்னை நாள் பொதுச் செயலாளர். அண்மையில் இலங்கை வந்திருந்­தார். ஏப்ரல் 1971 கிளர்ச்சியின் நினைவாக இங்கு அவரது நேர்காணல் பிரசுரமாகிறது. 71 கிளர்ச்சியில் விசேட குற்றவியல் ஆணைக்­குழுவினால் குற்றஞ் சாட்டப்பட்ட 41 சந்தேக நபர்களில் 2வது சந்தேக நபர் போபகே. பல்வேறு நூல்களில் வெளிவந்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அவர் பற்றிய அறிமுகத்தை இங்கு தருகிறோம்.

வெலிகமயைச் சேர்ந்த கடை உரிமையாளரின் மகன். தகப்பனார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். குடும்பத்தில் உடன் பிறப்புகள் 5 பேர். வெலிகம சித்தார்த்த வித்தியால­யத்தில் சாதாரண தர கல்வியைப் பயின்ற இவர் உயர் தரக் கல்வியை (விஞ்ஞானம்) மாத்தறை ராகுல வித்தியாலயத்திலும், காலியில் ரிச்மன்ட் வித்தியாலயத்திலும் பயின்றார். இரு வாரங்கள­ளவில் தெஹிவளை மக்கள் வங்கியில் தொழில் புரிந்து விட்டு, அம்பாறை ஹாடி நிறுவனத்தில் இயந்திரவியல் பயிற்சி பெற்றார். 1965ஆம் ஆண்டு போராதனைப் பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்தில் அனுமதி கிடைத்தது. இதன் பின் அரச உலோகப் பொருட் கூட்டுத்தாபனத்திலும் இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிந்தார். பின்னர் இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்தி­லும், எண்ணெய்க் கூட்டுத்­தாபனத்திலும் தொழில் புரிந்தார். இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அதிகாரி­யாகவும் இருந்தார். சண்முகதாசன் தலைமை­யிலான சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலி­ருந்து விலகிய விஜேவீர தலைமையிலான இளைஞர் அணியில் இவரும் ஒருவர். ஜே.வி.பி. அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர் தற்போதைய அமைச்சர் நிமலசிறி ஜயதுங்க (அப்போது கட்சிக்குள் லொக்கு அத்துல என்று அழைக்கப்­பட்டவர்). 1969ஆம் ஆண்டு (நீர்கொழும்பில்) 50 பேரைக் கொண்டு முதலாவது தடவையாக கூட்டப்பட்ட ரகசியக் கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யில் முழு நேர ஊழியராவ­தற்காக தனது தொழிலிலிருந்து விலகினார் (அப்போது அவரின் வயது 26). 1971 கிளர்ச்சிக்கான நிதி திரட்டலின் போது போபகே இலங்கை வங்கியின் யோர்க் வீதி கிளையில் நடந்த கொள்ளையில் பங்கேற்றிருந்தார். ஆயுதத் தயாரிப்புக­ளுக்கான திட்டங்களும் போபகே தலைமையில் மேற்­கொள்ளப்­பட்டிருந்தன. கொழும்பு தாக்கு­தல் நடவடிக்­கை­களுக்கு போபகேவும், ஜயதேவ உயங்கொடவும் பொறுப்பாக இருந்தனர்.

ஏப்ரல் கிளர்ச்சி தோல்வியுற்றதன் பின் யூன் 19ஆம் திகதி பாணந்துறையிலுள்ள ஒரு விகாரையில் வைத்து போபகே கைது செய்யப்பட்டார். சிறையில் வைத்துக் கட்சியைப் புனரமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்­டார். சிறைக்குள்ளிருந்தே கட்சி பற்றியும், ஏப்ரல் கிளர்ச்சி குறித்தும் சுயவிமர்சனம் செய்யும் பணி போபகேயிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. (ஆனால் போபகேயினால் தயாரிக்கப்பட்ட சுயவிமர்சன அறிக்கை விஜேவீரவினால் ஏற்றுக் கொள்ளப்படவி­ல்லை. அது வேறு ஒருவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்­டிருந்தது.) கிளர்ச்சி­யில் ஈடுபட்டவர்களில் 1977ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட­தன் பின் 78ஆம் ஆண்டு தொடக்கம் 1983 வரை போபகே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக இருந்தார்.

இனப்பிரச்சினை குறித்த விவகாரங்களை ஆராயும் பொறுப்பு கட்சியினால் இவரிடம் ஒப்படைக்கப்­பட்டிருந்தது. அதன் நிமித்தம் தமிழ் மக்களின் சுயநிர்­ணய உரிமையை ஆதரித்து இவர் எழுதிய ”இலங்கை­யின் இனப்பிரச்சினை” எனும் நூல் மத்தியகுழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்­தது. இந் நூலினை பிற்காலத்­தில் ஜே.வி.பி. ஏற்றுக்­கொள்ளவில்லை. சுயநிர்ணய உரிமையை எதிர்த்து சுயநிர்ணய உரிமைக்கெதிரான கற்பிதங்களை உள்ள­டக்கிய விஜேவீரவின் ”தமிழ்ப் பிரச்சினைக்குத் தீர்வு” எனும் நூல் இதன் நிமித்தமே எழுதப்பட்டது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இன்று ஜே.வி.பி. போபகேவி­னால் எழுதப்பட்ட நூலை கட்சியின் நூலாகக் கொள்வ­தில்லை. கட்சிக்குள் கருத்து ரீதியாக நடத்தப்பட்டு வந்த உட்கட்சிப் போராட்டத்தின் விளைவாக இறுதியில் 1984 பெப்ரவரி 29ஆம் திகதி கட்சியின் அரசியல் குழு, மத்திய குழு, மற்றும் உறுப்பினர்களை விழித்து எழுதப்பட்ட நீண்ட விமர்சனங்கள் அடங்கிய (இதில் இனப்­பிரச்சினை குறித்த ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கு குறித்த விமர்சனங்களும் அடங்கும்) கடிதத்­தின் மூலம் அவர் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் பதவி உட்பட சகல பொறுப்புகளி­லிருந்தும் விலகுவதா­கக் கூறி கட்சியின் சகல சொத்துக்களையும், ஆவணங்­களையும் ஒப்ப­டைத்தார். விரக்தியும் ஏமாற்றமும் அடைந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு வரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இவர் 1989ஆம் ஆண்டு இலங்கையின் பாதுகாப்பற்ற நிலையின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கு அரச திணைக்களமொன்றில் தனது பொறியியல் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தற்போது இலங்­கையின் இனப்பிரச்சி­னைக்கு அரசியல் தீர்வொன்றுக்­கான முயற்சி தொடர்பாக அவுஸ்திரேலியாவில் செயற்பட்டு வரும் Friends For Peace in SriLanka எனும் ஒரு அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். சரிநிகர் கடந்த 3 வருட காலமாக இவருடன் தொடர்புகொள்ள முயன்ற போதும் கிடைக்கவில்லை. தற்செயலாக அவர் இலங்கை வந்த செய்தி கிடைத்ததும் அவருடன் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கத்தை இங்கு பிரசுரிக்கிறோம்.

ஜே.வி.பி.க்கு எதிராக இவரின் விமர்சனங்க­ளைப் பயன்படுத்­தும் நோக்கில் அரச தொடர்பு சாதனங்­களும் இவரிடமிருந்து பேட்டியெடுத்து வெளிப்படுத்தின என்பதும் உண்மையே. ஆனால் இன்னமும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் ஜே.வி.பி.யின் அகரீதி­யான குறைகளைக் களைவதற்கு ஏதுவான வகையிலும் விமர்சனங்களை முன்­வைக்க முனைவதையும் இவரின் எச்சரிக்கை­யும் பொறுப்பும் மிகுந்த கருத்துக்களி­லிருந்து அவதானிக்க முடிகிறது.

கட்சியிலிருந்து விலகக் காரணம் என்ன?

நான் கட்சியிலிருந்து 1984இல் விலகினேன். எனது விலகல் குறித்து நான் எழுதிய கடிதத்தில் பல விடயங்­களைச் சுட்டிக்காட்டியி­ருந்தேன். குறிப்பாக கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவம் செயற்படுத்தப்­பட்ட விதம் குறித்து எழுந்த பிரச்சினை, கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாத போக்கானது ஒருபுறம் கட்சியின் இருப்பின் மீது பாதிப்பைச் செலுத்தி வந்த அதே நேரம், தலைமையிடம் அதிகாரத்துவம் இறுகிக் கொண்டே சென்றது. இதைத் தவிர முக்கியமாக, இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாடு பற்றியும், கடந்தகால சுயவிமர்சனத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றியும் இன்னும் பல விடயங்கள் குறித்தும் விளக்கியிருந்தேன். மேலும் கடந்த கால செயற்பாடுகள் அனைத்தின் போதும் தனித்து நின்று செயற்பட்டதும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுவதில் காட்டிய வெறுப்பு, கட்சிக்கு வெளியிலி­ருந்து வருகின்ற கருத்துக்களை ஒட்டுமொத்த­மாக நிராகரிப்பது, கட்சியின் முடிவு என்றும் சரியானது என்ற பிடிவாதம் என்பன கட்சியின் சரியான போக்கை அடையாளம் காணத் தடையாக இருந்தது.

1971 கிளர்ச்சி குறித்துச் சுருக்கமாக விளக்குங்களேன்?

கட்சி அமைக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில் கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் காணப்பட்டன. தர்மசேகர, சரத் விஜேசிங்க, லொக்கு அத்துல போன்றவர்கள் இவ்வா­றான அணிகளாக இருந்தனர். இப்போது அதனைத் திரும்பிப் பார்த்தால் அப்போது அந்த கருத்துப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு கட்சியென்ற அளவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை­யென்றே தோன்றுகிறது. அப்போது மக்கள் எங்கள் அமைப்பை சேகுவேரா இயக்கம் என்று தான் அழைத்தனர். எங்கள் மத்தியில் கூட ஆரம்பத்தில் ”இயக்­கம்” என்று தான் எங்களை அழைத்துக் கொண்டோம். 70இலி­ருந்து தான் மக்கள் விடுதலை முன்னணி எனப் பெயரிட்டோம்.

71 புரட்சிக்கு உந்துதலாக நாட்டுக்கு வெளியிலும் உள்ளும் சில காரணிகள் தொழிற்பட்டன. புறக்காரணியாக 60களில் இந்தோனேசியாவில் புரட்சிகர எழுச்சியும் அதன் மீதான ஒடுக்குமுறை, சிலியில் நடந்த ஆட்சி மாற்றம், கியூபா, மற்றும் லத்தின் அமெரிக்­காவில் ஏற்பட்ட எழுச்சிகள் எங்களுக்கு ஆதர்சமாக இருந்தன. உள்நாட்டு அளவில் எடுத்துக்­கொண்டால் கட்சி அங்கத்தவர்கள் கைது செய்யப்­படுவதும், தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிரு­ந்தது. சேகுவேராவின் கருத்தின்படி எதிரி எம்மீது தாக்க முன்பு நாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க நாங்களும் ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினோம், பின்னர் ஆயுதங்களை பறிக்கத் தொடங்கினோம். 70இல் இது சிறிது குறைந்தது. தோழர் விஜேவீரவும் கைது செய்யப்­பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதும் நாடு முழுவதும் பல கூட்டங்களை ஒழுங்கு செய்தோம். பலமான வரவேற்பு எமக்கிருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பவை எங்களை சீ.ஐ.ஏ. ஏஜென்டுகள் எனப் பிரச்சாரம் செய்தன. எங்களுக்­கெதிராக அரசாங்கத்தைத் தூண்டி­விட்­டன. அதே வேளை எம்மீதான அரசாங்கத்தின் பாய்ச்சலும் அதிகரித்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆதர் ரத்னவேல் என்பவர் நியமிக்கப்பட்டவுடன் அவர் பத்திரிகை­களுக்கு அறிக்கை விடுத்தார், ஜே.வி.பி. என்பது மக்களின் ”நம்பர் வன்” எதிரி, அதனை முற்றுமுழுதாக அழிக்க வேண்டுமென்றார். இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் இளைஞர்களாக இருந்த எம்மைப் போன்றவர்களு­க்கு ”இனி இவர்கள் எம்மை அழிக்கப் போகிறார்கள். எனவே நாங்கள் மேலும் ஆயுதம் சேகரிக்க வேண்டும்” என உந்தித் தள்ளி­யது. அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆயுதங்­களைச் சேகரிப்பதற்கு இலகு வழிமுறையாக பொலிஸ் நிலையங்களைத் தாக்குவது என்ற கருத்து எம்மிடமிருந்தது. ஆயுதங்கள் சேகரிக்கப்­பட்டுக் கொண்டிருந்த அதேநேரம் சுமுகமாக அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் அவை தோல்வியிலேயே முடிந்தன. எமது இயக்கத்திலிருந்த ஒஸ்மன்டின் தாய் சீலவத்தி -இவர் ல.ச.ச.க.விலிருந்து விலகி எம்முடன் இணைந்திருந்தார்.- என்.எம்.பெரேராவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் உரையாடிய போது ”எங்களை ஏன் சீ.ஐ.ஏ. இயக்கம் என்று கூறுகிறீர்கள்” என்று கேட்டதற்கு அவர், சீ.ஐ.ஏ. உங்களுக்கு அனுப்பிய காசோலையொன்று உள்ளது என்று கூறினார். சீ.ஐ.ஏ. எங்களுக்கு காசோலை அனுப்புமளவுக்கு ஒரு முட்டாள் தனமான அமைப்பில்லையே. அந்த காசோலையைப் பத்திரி­கைகளில் பிரசுரிக்கும்படி கோரினோம். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. வேறும் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடி­னோம். சிலர் எம்முடன் இது குறித்து உரையாட மறுத்தனர். 1971 மார்ச் அளவில் தோழர் விஜேவீர கைது செய்யப்பட்டார். அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் 3வது விதியை நடைமுறைப்­படுத்தும் ஏற்பாடுகள் பிரகடனப்படுத்தப்­பட்டன. அதாவது மரணப் பரிசோதனையின்றி சடலங்களைத் தகனம் செய்யும் விதி அது. இது தான் உண்மையில் 71 புரட்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே நாங்கள் இது குறித்துக் கட்சிக்குள் ஆராய்ந்தோம். இனி அரசாங்கம் படுகொலைகளை நடத்த ஆயத்தமாகி விட்டது. இதே வேளை கட்சிக்குள் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டது. அதாவது பதுளை, மொனரா­கலை, சிலாபம், அனுராதபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த தோழர்கள் தங்களைத் தொடர்ச்சியாகக் கைது செய்து வருவதாக­வும், தாங்கள் காடுகளை நோக்கித் தலைமறை­வாகத் தொடங்கியிரு­ப்­பதாகவும், தாக்கு­தல் நடவடிக்­கையை மேற்கொள்ள வேண்டுமென்­றும் கோரினர். அது வரை எல்லோருக்கும் அப்படித்தான் கற்பிக்கப்ப­ட்டிருந்தது. கொழும்பு போன்ற இடங்களி­லிருந்து அது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படவு­மில்லை. அவ்வாறான ஒரு நிலைக்குத் தயாராக இருக்கவுமில்லை. ஆனால் கட்சிக்குள் பிரதான அலையாக இந்தக் கோரிக்கை எழுந்ததும் கட்சிக்குள் தாக்குதல் தீர்மானத்தை எடுக்க நேரிட்டது.

எதிரியை முந்திக்கொண்டு முழு அளவில் தாக்க வேண்டும் என்ற அந்த கருத்துடன் உங்களுக்கு உடன்பாடுண்டா?

இல்லை. ஆயுத ரீதியான அடக்குமுறை­யொன்றுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபட முன்பு செய்யப்பட வேண்டிய வேலைகள் இருக்கிறது. மக்கள் மத்தியில் காலூன்ற வேண்டும். இடதுசாரி நட்பு சக்திகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியிருக்க வேண்டும். சிவில் அமைப்புகளுடன் -அதாவது மனித உரிமைகள் அமைப்புகள் போன்­றவை- செயற்பட வேண்டும். இப்படி ஒரு மக்கள் அமைப்பாகக் கட்டப்பட்டிருந்­தால் இவ்வாறான அடக்குமுறையானது மக்களுக்கெ­திரான அடக்குமுறையாக மாறியிருக்கும், முழு மக்களும் அவ்வட­க்குமுறையை முறியடிக்கும் பொறுப்பையுடையவர்களாக இருந்திருப்பர். தனிமைப்பட வேண்டியிருந்திருக்காது.

1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லின் போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் யாழ் பல்கலைக்கழகத்தி­னருகில் உரையாற்றினேன். அப்போது கூட்டத்தில் இருந்த வரதராஜப் பெருமாள் எழுந்து ஏன் லத்தீன் அமெரிக்காவில் தற்போது நடப்பதைப் போன்ற ஆயுதப் புரட்சியொன்றை நடத்துவதற்குப் பதிலாக இப்படிப் பாராளுமன்ற வழி முறையை நாடியிருக்கி­றீர்கள்? என்று வினவினார். லத்தீன் அமெரிக்காவில் தற்போதைய நிலையில் ஒரு தேர்தலை நடத்தமுடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவுகிறது. ஆனால் இங்கு அப்படியல்ல தேர்தலொன்று நடைபெறுகை­யில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து ஏன் நாங்கள் மக்கள் மத்தியில் இயங்க முடியாது என நான் வினவினேன். அவர் அதனை நிராகரித்து கூட்டத்தில் களேபரமே பண்ணியிருந்­தார்.

1971இல் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் குறித்து நாங்கள் சட்ட ஆலோசனைகள் பெற்ற போது அவர்கள் 1918ஆம் ஆண்டு பிரித்தானியா அமுல்­படுத்தியபின் இவ்வாறான ஒரு விதி வரலாற்றில் தற்போது தான் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எனவே எந்த நம்பிக்கையும் கொள்ளத்தக்க சூழ்நிலை தற்போது இல்லை என்பதை தெரிவித்தனர். தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கருத்து மேலும் பலமடைய இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. அதன்படி ஏப்ரல் 5ஆம் திகதியன்றே தாக்குதலை நடத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் விளைவுகளை நீஙகள் அறிந்திருப்பீர்களே.

சிறைச்சாலைக்குள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்­டோம். பல கருத்துகள் பற்றியும் விவாதித்தோம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. அவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்­பட்டால், அது குழப்பப்பட்டது. கண்டிக்கப்பட்டது. எதிர்க்கப்பட்டது. சில சமயங்களில் சக தோழர்களாலேயே தாக்கப்பட்டனர். சகிப்புத்­தன்மை பலரிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக சிறையிலேயே பல பிளவுகள் உருவாகின. இதற்கான காரணம் வரட்டுத்தனமாக நாங்கள் சில முடிந்த முடிவாக, மத சூத்திரங்களைப் போல விட்டுக்கொடாத கருத்துக்களைக் கொண்டிருந்ததே.

இந்தக் கருத்துப் பிரச்சினைகளில் இனப்பிரச்சினை குறித்த விடயம் எந்தளவு பாத்திரம் வகித்திருந்தது?

சிறைக்குள் இருந்த போது தான் முதற் தடவையாக இனப்பிரச்சினை குறித்த அறிவைப் பெற முடிந்தது. 71க்கு முன்னர் தமிழ் மக்கள் மத்தியில் தொழிற்படுவதற்கு இருந்த சந்தர்ப்பங்கள் குறைவு. சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விஜேவீர விலகிய போது சண் ஒரு தமிழராக இருந்ததால் தான் விஜேவீர விலகி வந்தார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அது காரணமாயிருந்தி­ருந்தால் அதற்கு முன் விஜேவீர அவருடன் இணைந்து வேலை செய்திருக்க முடியாதே. கருத்து ரீதியான பிரச்சினையினால் தான் விஜேவீர ஒதுங்கினார். இந்த பிரச்சாரமும் தமிழ் மக்கள் மத்தியில் செல்லத் தடையாக இருந்தது. ஆங்காங்கு தமிழ்த் தோழர்களுடன் உரையாடல்களை நடத்தியிருந்தோம். ஆனாலும் அவை போதுமானதாயிருக்கவில்லை.

அதேவேளை நாங்கள் நடத்தியிருந்த வகுப்புகள் ஐந்தில் இந்திய விஸ்தரிப்புவாதமும் ஒன்று. அதில் இந்திய வம்சாவழி மக்களைப் புரட்சிக்கு எதிரான சக்தியாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. உங்களுக்குத் தெரியும் இந்திய விஸ்தரிப்புவாதமென்பது மாவோவால் முன்வைக்கப்­பட்ட கருத்து. அதே கருத்தை நாங்களும் கொண்டிருந்தோம். இந்திய வம்சாவழியினர் புரட்சிக்கு சாதகமானவர்களா என்ற கருத்துக் குறித்த கலந்துரை­யாடலின் போது சில தோழர்கள் குறிப்பாக பியதிலக்க போன்றவர்களால், இந்திய வம்சாவழியினர் தங்களது நாடாக இலங்கையைக் கருதவில்லை­யென்றும், அவர்களின் வீடுகளில் கூட இந்தியத் தலைவர்களினதும், திராவிட நாடு கேட்கும் திராவிட இயக்கத் தலைவர்களினதும் புகைப்படங்­கள் தான் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், எனவே இந்த மக்களை அவர்கள் எந்த நேரத்திலும் அவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்பன போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் இக்கருத்து கட்சியின் கருத்தாக இருக்கவில்லை. ஆங்காங்கு சில தோழர்களிடம் இருந்த கருத்துக்கள் மாத்திரம் தான் இவை.

இந்தியவம்சாவழி மக்களை 'ஐந்தாம் படை” என்ற வகையிலான ஜே.வி.பி.யின் முன்னைய ஆவணங்கள் இருக்கின்றனவே?

கொள்கையளவில் அப்படியான கருத்துக்கள் கட்சி­க்கு இருக்கவில்லை. ஆனால் சில வகுப்புகளில் இது குறித்­துத் தீவிரமான கருத்தாடல்கள் இடம்­பெற்றிருந்தன. அப்ப­டியான ஒரு கருத்து கட்சியின் கருத்தாக இருந்திருந்தால் அப்போது இந்திய வம்சாவழி மக்கள் பாதிப்புக்குள்ளாகியி­ருப்பார்களே. ஆனால் அப்படி அவர்களுக்கு எதிராக எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை.

சிறையில் இருக்கையில்தான், 1972ஆக இருக்க வேண்டும். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்­தப்பட்டிருந்த நூற்றுக்­கணக்கான தமிழ் இளைஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. சந்ததியார் போன்றவர்களுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் வைத்து தொடர்ச்சியாக உரையாடியிருந்தேன். அப்போது தான் முதற்தடவை­யாக இப்பிரச்சினை குறித்த விளக்கம் ஏற்பட்டது. இது குறித்த எமது பாத்திரம் என்ன என்பது குறித்துக் கலந்துரையாடினோம். அது குறித்து ஆராயத் தொடங்கினோம். இதன் விளைவாகத் தான் 1977 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி ரஷ்யப் புரட்சியின் நினைவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் வைத்து கட்சியின் ”புரட்சிகர கொள்கைப் பிரகடனத்தை" வெளியிட்டி­ருந்தோம். அதில் மதம், மொழி, சுயநிர்ணய உரிமை என்பன குறித்து தனித் தனியான விளக்கங்களை அளித்தோம். இது சிறைக்குள்ளி­ருந்த போது தயாரிக்கப்பட்டது. இனப்பிரச்சினை குறித்து கட்சியின் கொள்கையை ஆராய என்னிடம் தான் அரசியல் குழு பொறுப்பளித்திருந்தது.

இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்த விடயத்தில் இலங்கை திராவிடக் கழகம் குறித்தும் அதன் தலைவர் இளஞ்செழியன் குறித்தும் கூட வகுப்புகளில் உரையாடப்பட்டிருக்கிறதல்லவா?

இந்திய விஸ்தாரிப்புவாதம் பற்றிய பிரதான கருத்தை எடுத்துக் கொண்டால், முதலாளித்துவ நாடொன்று என்ற வகையில் உலகச் சந்தையில் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையில், சந்தைப்படுத்­தலுக்காக சிறு, சிறு நாடுகளை நாடிநிற்க வேண்டியிருக்­கிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் இதற்காக தம்மைச் சூழ்ந்துள்ள நாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள எத்தனிக்கின்றனர். எனவே காலூன்றலுக்கான வாய்ப்புகளை அமைத்துக் கொள்ளவும் அதனைப் பலப்படுத்தவும் முயல்கின்றனர். இதனைத் தவிர தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டோடு சேர்த்து இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்­களை இணைத்து ஒரு நாடாக ஆக்க இருக்கிறது என்ற கருத்தும் பலப்படத் தொடங்கியது. இந்திய விஸ்தரிப்பு­வாதக் கருத்துக்கு இவையெல்லாம் துணையாகின. இந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது நலன்களுக்காக இக்கருத்துக்களையும், இந்திய வம்சாவழியினரையும் பயன்படுத்த விளைகிறதா? இந்திய வம்சாவழியினர் இதற்குப் பலியாவார்களா? என்பது போன்ற விடயங்கள் பேசப்பட்டன.

71 புரட்சியின் போது இளஞ்செழியனும் திராவிடக் கழகத்தவர்களும் சேர்ந்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்களல்லவா? ஜே.வி.பி.க்கு எதிர்விரோத சக்திகளாக இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?


தோழர் இளஞ்செழியனுடன் அன்று கட்சி என்ற வகையில் ஹட்டனில் வைத்து பல கலந்துரை­யாடல்களை நடத்தியிருந்தது. வி.எல்.பெரைரா போன்ற வேறும் சில மலையக அமைப்புகளுடன் அப்போது எங்களுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்க­ளையும் நடத்தியிருக்கி­றோம்.

நீங்கள் இனப்பிரச்சினை குறித்து ஒரு நூலை வெளியிட்டிருந்தீர்கள். அது கட்சியின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட ஒன்றா?

ஆம், அது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட நூல். அது இனப்­பிரச்சினை பற்றிக் கட்சியினால் பயன்படுத்தப்பட்ட நூல். இனப்பிரச்சினையைத் தூண்டிவிடவும், அதனை வளர்த்து விடவும் தென்னிலங்கை முதலாளித்துவ வர்க்கத்­தினர் வகித்த பாத்திரம், வடக்கில் முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த பாத்திரம் என்பன குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வர்க்க நலன்களுக்காக இதனை இந்நிலமைக்கு வளர்த்து வந்திருந்தார்கள். மேலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு­முள்ள தனித்துவமான அடையா­ளங்­கள், அச்சமூகங்க­ளின் மத, மொழி, பண்பாட்டு உரிமை­கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இலங்கையர் என்கின்ற இனமொன்று இருக்கிறதா? அல்லது பல்லினங்கள் தத்தமக்­குரிய அடையாளங்க­ளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற­னவா? அடிமை நிலைச் சமூக அமைப்பில் இனம் என்றிருக்­கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிக்கு தான் இனத்துவ சிந்தனைகள் வளரத் தொடங்கு­கின்றன. இலங்கையில் கூட சிங்கள, தமிழ் அரசுகள் இருந்திருக்கின்றனவே. சிறிது காலம் தான் இவையெல்­லாம் சேர்ந்த ஒரே நாடாக இருந்திருகிறது. அது காலனித்துவத்தின் கீழ். ஆனால் அதனைத் தொடர்ச்சி­யாகப் பேண முடியாது போனது. சிங்கள இனம் தம்மை இனமாக அடையாளப்படுத்த காட்டும் காரணிகள் அனைத்­தும் தமிழ் இனத்துக்கும் இருக்கிறதே. சுயநிர்ணய உரிமையை அந்நூலில் வலியுறுத்தியி­ருக்கிறோம். ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு பிரிந்து போவது மட்டுமே என நாங்கள் கூறவில்லை.

இனப்பிரச்சினை பற்றிய அதற்கு முன்னைய நிலைப்பாடு குறித்து சுயவிமர்சனம் செய்து கொண்டதுண்டா?

சிறையில் இருக்கும் போது 1970, 71 காலப்­பகுதியில் இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் போதாமை இருந்ததை விமர்சன­பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தேன். அதன் விளைவாகவே தனியாக அது குறித்து சிறிய ஆவணங்க­ளைத் தயாரிக்க நேரிட்டது. 1978ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டில் சமர்ப்பிக்கவென சுயவிமர்சனத்­தைத் தயாரிக்­கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் அந்நகலைத் தயாரிக்கும் போது கட்சிக்குள்ளிருந்து முன்வைக்கப்­பட்ட விமர்சனங்களை மட்டுமன்றி கட்சிக்கு வெளியில் இருந்து முன்வைக்கப்பட்டவற்றில் நியாயமானவை எனக் கருதப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்களையும் கவனத்திற்கெடுத்திருந்தேன். அதனை மத்திய குழுவுக்குச் சமர்ப்பித்த போது அதிலடங்கியிருந்த சிலவற்றை விஜேவீர ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்ட வடிவம், இந்திய விஸ்தரீப்புவாதம், இனப்பிரச்சினை...என்பன குறித்து நான் குறிப்பிட்டிருந்த விடயங்களுக்கு கருத்து ரிதியான பதிலை அளிக்க தோழர் விஜேவீர முன்வரவில்லை. இதனை எதிரிகள் சாதகமாக்கிக் கொள்வார்கள் என்ற தர்க்கத்தை மட்டுமே அவர் முன்வைத்தார். எமது பிழையான வழிமுறைகள் என்பதை நாங்கள் நேர்மையாக சுயவிமர்சனம் செய்கையில் அதனை எதிரி பயன்படுத்துவது குறித்து நாங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனையோரை விட்டுவிட்டு, மக்கள் அதற்குத் தரும் பிரதிபலிப்பு மட்டும் தான் எமக்கு முக்கியமானது என நான் தெரிவித்திருந்தேன். மத்திய குழுவில் பெரும்பான்மையானோர் இதனை ஏற்க மறுத்தனர். எனவே இதனைத் தொடர்ந்து செய்யும் பணி தோழர் தயா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தோழர் தயா வன்னியாரச்சி அண்மை­யில் கருத்து வெளியிடும் போது அந்த சுயவிமர்சனத்தை நானோ அல்லது விஜேவீரவோ தான் தயாரித்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் அன்று இக்கருத்தை மத்திய குழுவுக்கு முன்வைக்கவில்லை. அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்­தார். இறுதியில் அடுத்த மத்திய குழு கூட்டத்தின் போது அது தொலைந்துவிட்டது என்று கூறினார். அது அன்று வெளியிடப் பட்டிருந்தால், உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனளித்திரு­க்கும். என்னிடமிருந்த குறைபாடு என்னவென்றால் நானும் அன்று அதற்காக வாதாடியிருக்க வேண்டும்.

அப்படியென்றால் கட்சியால் பிற்காலங்களில் வெளியிடப்பட்ட ”சுயவிமர்சனம்” குறித்த நூல்?

அது தோழர் றோகண விஜேவீரவால் தயாரித்து பொது வாக வெளியிடப்பட்டது. என்றாலும் அது பூரணமான ஒன்றல்ல.

நீங்கள் தயாரித்த சுயவிமர்சன நகலில் இனப் பிரச்சினை குறித்த விடயத்தைக் கட்சி எதிர்கொண்ட விதம் பற்றி...?

சிறைக்குள்ளிருந்த போது ”புரட்சிகர கொள்கைப் பிரகடனம்” பற்றிய ஆவணத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விடயம் பற்றி தோழர் விஜேவீர ”இந்தக் கருத்தை வெளியிட்டால், சிங்கள சமூகம் ஏற்றக் கொள்ளாது, சிங்கள சமூகத்தின் மத்தியில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும்” என்று கூறினார். தனிப்பட்ட முறையில் தோழர் விஜேவீர சுயநிர்ணய உரிமை குறித்த விடயங்களை ஏற்றுக் கொண்டாலும் கூட, சிங்கள சமூகத்தின் மத்தியிலிருந்து வெளிக்கிளம்பக் கூடிய எதிர்­ப்புகளுக்கு அஞ்சினார். எனவே கொள்கைப் பிரகடனத்தில் வேறு எச்சரிக்கையான சொற் பிரயோகத்தைக் கையாள வேண்டுமென்று கூறினார். அதன்படி பலாத்காரமாக இனங்­களை சேர்த்து வைத்திருப்பதையும், பலாத்காரமாக பிரிந்து போவதையும் எதிர்க்கிறது என்ற வகையில் இடப்பட்டது. சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பதாக அவர் கூட்டங்க­ளிலும் கூறியிருக்­கிறார். ஆனால் பிற்காலங்களில் அதிலிரு­ந்து அவர் விலகியதைக் காணக்கூடியதாக இருந்தது.

நீங்கள் இனப்பிரச்சினை குறித்து தயாரித்த நூலுக்கும் பின்னர் விஜேவீர தயாரித்த நூலுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன இருக்கிறது?

நான் கட்சியிலிருந்து விலகியதன் பின்னர் தான் தோழர் விஜேவீரவின் அந்நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் ஒரு வகையில் இன­வாதத் தன்மையைக் கொண்டது எனச் சுருக்கமாகக் கூறலாம். எனக்குத் தெரிந்த வரையில் தற்போது ஜே.வி.பி. சுயநிர்ணய உரிமை­யை அங்கீகரிக்­கவில்லை. அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்­துக் கொண்டு எவ்வாறு மக்கள் மத்தியில் இயங்க முடியுமோ எனக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களெல்லோரும் சேர்ந்து எங்களது இந்த உரிமையை அங்கீகரி என்று கூறினால் கட்சியால் என்ன பண்ண இயலும்?

ஜே.வி.பி.யில் இது வரை காலம் பல உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் பலரும் கொள்கை ரீதியான பிரச்சினையினாலேயே பிளவுற்றிருக்கின்றீர்கள். இந்நிலைமைக்கு உட்கட்சிப் போராட்டத்துக்கான பொறிமுறையின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்குமா?

70, 71இல் தலைமையிலிருந்த பலரும் விலகியதும் இந்த காரணங்களினால் தான். பொதுவாகவே தலைமையி­லிருந்த குறைபா­டென்பதை விஜேவீரவும் ஏற்றுக்கொண்டி­ருந்தார். தொண்டர்களை தலைமைக்கு தயார்படுத்துவதெ­ன்பது இலகுவான காரியமல்ல. ஜே.வி.பி. போன்ற அமைப்­புக்கு தலைமைக்கு தயார்படுத்துவதற்கு சரியான காலம் செல்லும், தொண்டர்களுடன் பணியாற்றி, உள, உடல், கருத்து ரீதியான தயாரிப்புக்கு தொடர்ச்சியான பயிற்சிளி­க்கப்பட்டு தலைமைக்கு வர காலம் செல்லும். கட்சிக்குள் இப்படி நன்கு தயார்படுத்தப்பட்ட தலைமை இருக்கவில்லை. இது பொதுவாக புரட்சிகர அமைப்புகளுக்கு உள்ள சிக்கலான பிரச்சினை தான். வேறு வழியின்றி, இருக்கின்ற உறுப்பினர்களை தலைமைக்கு கொண்டுவர நேரிட்டது. உதாரணத்திற்கு விவசாயத்துறை, இனப்பிரச்சினை பற்றிய விவாதம் கட்சிக்குள் நடைபெற்ற போது கட்சிக்குள் விவாதம் நடந்தது எனக்கும் தோழர் விஜேவீரவுக்குமிடையில் மட்டும்தான். ஏனையோர் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பான்மையினர் கட்சியின் பிரதான அலையுடன் அடிபட்டுப் போபவர்களாக இருக்கும் போது சிறுபான்மையினரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாயினும் கூட அது எடுபடாது போகவே கட்சியிலி­ருந்து விலகுவது தவிர்க்க முடியாததாக இருக்கவே செய்யும். எனக்கும் கூட அது தான் நேர்ந்தது. நான் காண்கின்ற பிரதான குறைபாடும் கூட இது தான். சுயவிமர்­சனம் செய்வதில் காட்டுகின்ற தயக்கம் காரணமாக இது மட்டுமன்றி பல்வேறு பின்னடைவுகளை தொடர்ச்சியாகவே சந்திக்க நேருவது தவிர்க்க இயலாது.

சரிநிகர் 1998.05.28
ஜே.வி.பி. மீண்டும் வேட்டையாடுமா?








என்.சரவணன்.


”இம்முறை எமது கட்சி தடை செய்யப்பட்டால், ஐ.நா. சபை காரியாலயத்­தின் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளு­வோம்...! மீண்டுமொரு முறை நாங்கள் இரத்தம் சிந்தத் தயாரில்லை. நாங்கள் ஜனநாயக வழியிலேயே தொடர்ந்தும் செயற்படுவோம். தற்போது எங்கள் மூலோபா­யம், தந்திரோபாயம் அனைத்தையும் மாற்றியுள்ளோம்!...”

இவ்வாறு கடந்த மே தினக் கூட்டத்திற்கு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க அனுப்பி வைத்து­ள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜே.வி.பி.யின் மீது மீண்டும் ஒரு பாரிய அடக்குமுறை­யொன்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் பொ.ஐ.மு. அரசாங்கம் பதவியில் அமர்ந்ததிலிருந்து மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அரசாங்கத்­தால் ஜே.வி.பி. இயக்கத்­தின் மீது வன்முறை­யைத் தூண்டுவதும், நாட்டில் நிலவும் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளை ஜே.வி.பி.யின் மீது பழி சுமத்துவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்ற மாதம் ஜனாதிபதி சந்திரிகா­வின் உரையொன்­றில் ”ரோகண விஜேவீர­வின் ஆவி இன்னமும் உலவுகிறது. ஜே.வி.­பி. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப­ட்டு வருகிறது. இனித் தடை செய்ய நேரி­டும்” என எச்சரித்திருந்தார். அவரது அவ்வுரை ஆற்றப்பட்டு இரண்டு நாட்களுக்­குப் பின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த ”ஜே.வி.பி. மீண்டும் நாட்டில் பல தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே அரசாங்கம் கடுமையான நடவடிக்கையில் இறங்க நேரிடும்” என மிரட்டியிருந்தார். (இதற்கு முன்னரும் பதவிக்கு வந்து சில மாதங்களில் ”ஜே.வி.­பி. மீண்டும் எமக்கு பிரச்சினையை அளிக்கு­மென்றால் அதற்குத் தகுந்த மருந்து எம்மிடமுண்டு எனப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த மிரட்டியிருந்தது பற்றி சரிநிகரில் அப்போது வெளியிடப்பட்டிருந்தது)

இந்த மிரட்டல்கள் அலட்சியப்படுத்­தக் கூடியவை அல்ல. ஜே.வி.பி.யின் துரித வளர்ச்சி, அது தொடர்ந்து தேர்தல்களில் பெற்றுவரும் வெற்றிகள், அதன் மீதான மக்கள் செல்வாக்கு, தொடர்ச்சியாக இணைந்து வரும் அர்ப்பணிப்பு மிக்க இளை­ஞர்களின் சேர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் போலித்தன்மைகளையும், மக்கள் விரோத செயற்பாடுகளை­யும் அம்பலப்படுத்துவதில் அது கண்டு வருகின்ற வெற்றிகள் என்பன­வற்றை ஒரு முதலாளித்துவ அரசாங்கம் என்ற வகையில் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். இன்று ஜே.வி.பி. இயக்க­மானது ஆளுங் கட்சியின் முக்கிய எதிரி­யாக ஆகியிருக்கிற­தென்றால் அது மிகை­யில்லை என்றே கூறலாம். நாட்டில் இன்று பிரதான இடதுசாரிக் கட்சியாகவும் ஜே.வி.பி. ஆகிவிட்டுள்ளது என்பதை அண்மைய அதன் தன்மைகள் வெளிக்கா­ட்டியுள்ளன. எனவே தான் அரசாங்கம் ஜே.வி.பி.யைத் தடை செய்வதில் எடுத்து வரும் பிரயத்த­னங்கள் அதிகம் எனலாம். ஏதாவது ஒரு சிறு ஆதாரமேனும் ஜே.வி.பி. ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதா­கக் கிடைத்தாலும் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அழிப்பு நடவடிக்­கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர­லாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பிடி கொடுக்காத வகையில் ஜே.வி.பி.யும் தமது செயற்பாடுகளை மிக­வும் கவனமாக மேற்கொண்டு வருகிறது. அதன் பிரதிபலிப்புகள் தான் ”மீண்டுமொரு முறை இரத்தம் சிந்த மாட்டோம்...”, ”நாங்­கள் ஜனநாயக ரீதியில் செயற்படுபவர்­கள்...”, ”சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்பது போன்ற பிரச்சாரங்கள். ஆனால் இவ்வுரைகளுக்கு அரசாங்கம் மசியப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அரசாங்கம் திடமாகவே வேட்டை­யாடத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கி­றது என்பது தான் உண்மை. ஜே.வி.பி. ஆளும் பொ.ஐ.மு.வுக்கு ஆபத்தானதென்­பதை எப்போது உணர்ந்­தது? எப்போதிரு­ந்து ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கை­களை மேற்கொள்ளத் தொடங்கியது? என்பதைப் பார்ப்போம்.


அரசாங்கத்தின் முதல் எதிரி?

1994 பொதுத் தேர்தலில் ஜே.வி.பி.­யும் ஈடுபடுமென்று பொது ஜன ஐக்கிய முன்னணி நம்பியிருக்கவில்லை. 1993 மாகாண சபைத் தேர்தலின் போது கூட ஜே.வி.பி.யின் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டையாடியதும் இந்த சந்திரிகர் தான். அத்தேர்தலின் போது ஜே.வி.பி.யை அழிக்க ஐ.தே.க. செயற்பட்ட விதம் குறித்து பிரச்சாரம் செய்த அதே வேளை எஞ்சிய ஜே.வி.பி.யினரும், அதன் ஆதரவா­ளர்களும், பெற்றோர்களும் தம்முடனேயே இருப்பதாகக் காட்டிக் கொண்டார். அது வரை காலம் தலைமறைவாகவும், அழிக்க­ப்பட்ட நிலையிலும் இருந்த ஜே.வி.பி.யினர் மீண்டும் வெளிவந்து அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பினர். தொடர்ந்து நிலைப்பதற்­குத் தேர்தலை சாதகமாக்கிக் கொள்ள முடிவுசெய்து 1994 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் பங்குகொண்டனர்.

ஐ.தே.க. விரோத சக்திகளையும், இடதுசாரி சக்திக­ளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இடதுசாரி வாக்கு­க­ளைப் பெறும் நோக்குடன் பொ.ஐ.மு. செயற்பட்டு வந்த வேளை, ஜே.வி.பி.யின் வருகையானது கலக்கத்தை ஏற்படுத்­தி­­யது. அதன் விளைவாக முதலாவது எதிர்ப்­பையும், பழி சுமத்தலையும் ஏற்படுத்தத் தொடங்கி­யது. ஜே.வி.பி.யின் வருகை ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் வாக்குகளைக் குறைக்­கப் போவதில்லை. நிச்சயமாகப் பொ.ஐ.மு.வுக்குக் கிடைக்­கப் போகும் வாக்குகளைத் தான் பாதிக்கும் என்று நம்பியது. தேர்தலின் போது ஜே.வி.பி.யை ஐ.தே.க.வே ஏற்பாடு செய்தது என சந்திரிகாவால் பகிரங்கக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பதவிக்கு வந்து இரு மாதங்களுக்­குள் (ஒக்டோபர் மாதம்) ”பியகம” சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள ”என்சல் லங்கா” தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் அரசாங்கத்­துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்­தியது. இவ்வேலை நிறுத்தம் ஜே.வி.பி.யின் சதி என 95 நவம்பர் 12ம் திகதி ரூபவாஹினியில் உரையாற்றிய சந்திரிகா குற்றஞ் சாட்டினார். இவ்வேலை நிறுத்தத்­தை பொலிஸாரை ஏவிப் படுபயங்கரமாக ஒடுக்கியிருந்தது. சந்திரிகாவின் அவ்வு­ரையில் ”இந்த ஊர்வலத்தில் முன்னர் பாராளுமன்றத்துக்கு குண்டு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்­பான அஜித் குமாரவும் இருந்துள்ளார். எனவே இது ஜே.வி.பி. யின் சதியே.” என்றார். ஆனால் உண்மையில் வேலைநிறுத்த­த்­தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார என்பவரின் பெயரும் அஜித் குமார என்றாலும் அவர் ஜே.வி.பி. அஜித்குமார அல்ல.

இந்த விடயத்தை அடுத்தடுத்த நாட்களில் சிங்களப் பத்திரிகைகளும் குறிப்பிட்டுச் சாடியிருந்தன. ஜனாதிபதி­க்குக் கிடைக்கின்ற புலனாய்வு அறிக்கை­கள் இப்படி உண்மைக்குப் புறம்பா­னவை தானா எனக் கேள்வி எழுப்பியி­ருந்­தன அப் பத்திரிகைகள். எனவே ஜே.வி.பி.யின் மீது குற்றஞ்சாட்டுவதிலேயே முழுக் கவனத்­தையும் குவித்திருந்­தார் என்பது தெளிவு.

இது நடந்த அடுத்த மாதம் நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி., நிறைவேற்று ஜனாதி­பதி முறையை நீக்கு­வதற்காகவே தாம் அத்தேர்தலில் போட்டி­யிடு­வதாகவும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக சந்திரிகா உறுதி­யாக தமக்கு வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதா­கவும், முடிந்தால் இந்தச் சவாலை ஏற்கும்படியும் அறைகூவியது. இதனைத் தொடர்ந்து நிறைவேற்று ஜனாதிபதிமு­றையை நீக்குவதாக ஏற்கெனவே உறுதிய­ளித்திருந்த சந்திரிகா­வுக்கு இந்தச் சவாலை ஏற்க வேண்டி வந்தது. அதன் விளைவாக ”1995 யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக” அறிவித்தார். அனால் அவ்­வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்பட­வில்லை. பொ.ஐ.மு.வுடன் கூட்டுச்­சேர்ந்தி­ருந்த 10 கட்சிகளும் கூட இம்முறையை நீக்குகின்ற உறுதியைச் சந்திரிகாவி­டமிருந்து பெற்றுக்கொண்டாலும் கூட இன்று வரை அவ்வாறு நீக்கப்படாதது குறித்துக் கண்டித்து வரும் ஒரே கட்சியாக ஜே.வி.பி. மட்டும் தான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் யூன் 15ஆம் திகதியன்று வாக்குறுதி மீறப்பட்டு முதலாவது வருடம், இரண்டாவது, வருடம் என அதனை நினைவு கூருமுகமாக ஆர்ப்பாட்ட­ங்கள், கூட்டங்களை நடாத்தி வருகிறது.

இவை மட்டுமன்றி அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு நிலையத்துக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்­களை நடத்தி வந்த சந்திரிகா பதவிக்கு வந்ததன் பின் அவ் ஒலிபரப்பு நிலையத்துக்கு மேலதிக­மாகக் காணிகளை அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்­தக்கது. இதற்கெதி­ராக ”வொய்ஸ் ஒப் அமொரிக்கா” வின் அருகில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அதுவும் ஜே.வி.பி.யின் மீது பழி போடப்பட்டதுடன் அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மீனவரைப் பொலிஸாரைக் கொண்டு சுட்டுக் கொன்றது.

நுரைச்சோலை அணுமின் நிலையத்­திற்கெதிராக மேற்கொள்­ளப்பட்ட ஆர்ப்பா­ட்டத்தின் போதும் அதற்கெதி­ரா­கத் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவரைக் கொன்றது சந்தி­ரிகா அரசாங்கம். இந்த எதிர்ப்­பியக்கத்துக்குப் பின்னால் ஜே.வி.­பி.யே செயற்படுவதாக பழி சுமத்தப்பட்டது. அதன் பின்னர் ஜயவர்தனபுர பல்கலைக்­கழகம், களனி நுண்கலைப் பல்கலைக்­கழகம் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல மாணவர் போராட்டங்களின் போதும் அவற்றைக் கடுமையான முறை­யில் கண்­ணீர்ப்புகை எறிந்தும், அடித்தும், அவர்க­ளைச் சிறை செய்தும் கைது செய்த போது ஜே.வி.பி.யே இவ்வளவையும் தூண்டி விட்டதாகக் குற்றஞ்சாட்டியது. குறிப்பாகப் புதிய கல்விச் சீர்திருத்தத்தினை எதிர்த்து எதிர்ப்பியக்கங்கள் செயற்பட்ட போது அதனையும் ஜே.வி.பி.யின் மீதே பழியைப் போட்டது.

நாட்டில் நடந்த பல்வேறு தொழிலா­ளர் போராட்டங்க­ளின் போதும் ஜே.வி.பி.­யின் மீது தான் பழி சுமத்தப்பட்டன. 1996ம் ஆண்டு நடத்தப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போதும் இது புலிகளும், ஐ.தே.கவும், ஜே.வி.பி.யும் சேர்ந்து செய்யும் சதியென அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இன்றைய தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வரை இது தான் நீடித்திருந்தது.

உண்மையில் இப்போராட்டங்களின் பின்னால் ஜே.வி.­பி. இல்­லாமல் இல்லை. ஆனால் இதில் எந்தப் போராட்டம் மக்கள் விரோதப் போராட்டங்களாக இருக்க முடியும்? இதில் எந்தப் போராட்டம் நியாயமற்ற போராட்டங்களாக இருக்க முடியும்? பொறுப்பான அரசாங்கம் செய்யாததைப் பொறுப்­பான மக்கள் இயக்கம் சுட்டிக் காட்டுவதும், கண்டிப்பதும், எதிர்ப்பதும் எப்படிச் சதி முயற்சியாகும்?

ஆனால், சதிமுயற்சி என்ற குற்றத்­தைச் சுமத்தி ஜே.வி.­பி.யின் செயற்பாடு­களை நிறுத்துவதற்குச் செய்த முயற்சிகள் எல்லாமே பயனளிக்காமல் போகவே, வெளிநாடு­களில் ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, விடுதலைப் புலிகளுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தது. நாட்டில் இடம்பெற்று வரும் பல கொள்ளைச் சம்பவங்களுக்­கும் ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்பிருப்பதா­கக் கூறி வந்தது. ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீதும், அதன் ஆதரவாளர்­கள் மீதும் அரசா­ங்கம் ஆங்காங்கு ஆளுங்கட்சியினரைக் கொண்டு அடிதடிகளை நடத்தி வந்தது. கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலின் போது ஜே.வி.பி.யி­னரின் மீது அரசாங்க­த்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதல் சம்பவங்­கள் பற்றிப் பத்திரிகைச் செய்திகளும் தேர்தல் நிலவரக் கண்காணிப்பு அறிக்கை­களும், புட்டுப், புட்டு வைத்திருந்தன. இதன் உச்சக் கட்டமாகக் கடந்த மார்ச் மாதம் 08ஆம் திகதியன்று பொ.ஐ.மு அரசாங்க­த்தின் அமைச்சரான மைத்தி­ரிபால சிறிசேனவின் செயலாளர் தர்மசிறி என்பவர் அரலகங்கவெல எனும் இடத்தில் வசித்து வந்த ஜே.வி.பி. உறுப்பினர் தசநாயக்க­வைக் கடத்திச் சென்று கொன்று போட்ட விடயம் முக்கியானது. இச்சம்பவ­த்தை நேரில் கண்ட சாட்சிகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்ட போதும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


முன்னைய அனுபவங்கள்

ஜே.வி.பி.யின் வளர்ச்சியையும், தமது அரசாங்கத்­தைப் பற்றிய அம்பலப்­படுத்தல்களையும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அரசாங்கங்கள், ஒவ்வொரு தடவையும் பாரிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வந்தது ஒன்றும் புதிய விடயமல்ல. 1971இல் ஜே.வி.பி.யின் வளர்ச்சியைப் பொறுக்காத சிறிமா அரசாங்கம் பாரிய அடக்குமுறை­யைக் கையாண்டு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது. 1977இல் கட்சி மீளப் புனரமைக்கப்­பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த ஜே.வி.பி.யினர் 1977 பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டனர். 1978இல் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தைக் கடுமை­யாக எதிர்த்தார்கள், 1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜே.வி.பி. க்கும் எதிராக பாவிக்கப்பட்டது. 80ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஜே.வி.பி. ஈடுபடாத போதும் அப்பாரிய வேலைநிறுத்­தப் போராட்டத்து­டன் ஜே.வி.பி.யும் தொடர்புபடுத்தப்பட்டு ஜே.வி.பி.இளைஞர்­களும் தேடப்பட்டார்கள். 1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு பல பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜேவீர போட்டியிட்டு மூன்றாவதாக பெரும்பா­ன்மை வாக்குக­ளைப் பெற்றிருந்தார். (அத்தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டிருந்தனர்.) 1982ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பி­னைக் கடுமையாக எதிர்த்து பிரச்சா­ரம் செய்தது ஜே.வி.பி. அது ஜனநாயக விரோ­தச் செயற்பா­டென ஜே.ஆர் அரசாங்கத்தி­ற்கெதிராக வழக்கும் தொடுத்­தி­ருந்தது. 1983ஆம் ஆண்டு மே தின ஊர்வலமும், பிரமாண்­டமான கூட்டமும் அப்போதைய ஜே.வி.பி.யின் பலத்தை நிரூபித்தது. இந்த மே தினத்திற்குப் பின்பு தான் ஜே.ஆர் ”இன்று அரசாங்கத்தின் பிரதான எதிரி ஜே.வி.பி.யே. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசி­யல்ல. விஜேவீர மீண்டும் கற்குகை­களை தேடிக் கொள்ள நேரிடும்” எனப் பகிரங்க­மாக உரையாற்­றியிருந்தார். அது போலவே நடந்தது. இதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்திய ஜே.ஆர் அரசாங்கம் அதற்கான பழியை ஜே.வி.பி., நவ சம சமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றின் மீது சுமத்தி அவற்றைத் தடை செய்தது. சிறிது காலத்தில் அரசாங்கம் ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய இரு கட்சிகள் மீதான தடைகளையும் நீக்கியது. ஜே.வி.பி. தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. அதன் மீதான கெடுபி­டிகள் அதிகரிக்க, அதிகரிக்க ஆயுத நடவடிக்­கைகளில் ஈடுபடத் தொடங்கியது. மீண்டு­மொரு அடக்குமு­றையை அரசாங்கம் இலகுவாக நடத்தி லட்சத்துக்கும் மேற்ப­ட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது.

இப்படிக் கடந்த காலங்களில் கூட ஜே.வி.பி.யின் வளர்ச்சியை ஒரு கட்டத்தி­ற்கு மேல் விடாத அரசாங்கம், அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்­பது தான் கடந்த கால வரலாறு. இன்றைய ஜே.வி.பி.யின் வளர்ச்சியும் மறு பக்கம் அரசின் அணுகுமுறைகளும் பழைய வரலா­ற்றை நினைவுபடுத்துகின்ற வகையிலேயே அமைந்துள்ளன. இந்த நிலையில் ஜே.வி.பி. யின் அணுகுமுறைகள் தான் முக்கியமா­னது.


ஜே.வி.பி.யின் எதிர் நடவடிக்கைகள்

கடந்த காலங்களில் ஜே.வி.பி. தமது ஆயுத செயற்பா­டுகளில் ஈடுபடுவதற்குச் சாதகமான காரணியாக கருதி வந்த ஒன்று தான் நாட்டில் மக்கள் முகம் கொடுத்து வந்த பல்வேறு நெருக்கடிகள். இந்த நெருக்கடிகள் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்பியது. (அதில் தீவிர வெறுப்பையுடை­யோரைக் கட்சி அரவ­ணைத்துக் கொண்டது.) ஆயுத நடவடிக்கைக­ளுக்­குச் சாதகமானது என நம்பியிருந்தது. ஆனால் இன்று அவற்றிலி­ருந்து பாரிய படிப்பினைகளைப் பெற்றுள்ள­தாகத் தெரிகிறது. அண்மையில் ஒருவர் இப்படி விமர்சிக்கின்றார்.

மக்கள் வெறுமனே வெறுப்புணர்வு பெற்றிருந்தால் மட்டும் போதாது, அந்த அரசாங்க விரோத நிலைப்பாட்டை, ஒட்டு மொத்த அரச விரோதமாக ஆக்குகின்ற வகையில் அவர்களை அரசியலூட்டியி­ருக்க வேண்டும்.

வெறுமனே புறச்சூழலை நம்பி மாத்திரம் இவை சாத்தியமில்லை. அதற்கு­ரிய அகத் தயாரிப்பு இருந்திருக்க வேண்­டும்.

கடந்த காலங்களில் ஒரு குழுவாக இயங்கி வந்திருக்கிறதே தவிர ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டப்படவில்லை. மக்களி­டமிருந்து தனிமைப்பட்ட கட்சியாக இருந்திருக்கிறது. மக்களை அரசியலூட்டி அவர்களைக் கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்க வேண்டும்.

வெகுஜன இயக்கங்களில் போது­மான ஈடுபாடு இருந்தது கிடையாது. கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், ஜனநாயகக் கோரிக்­கைகளுக்கூடாக கட்சிக்கு அதரவாகச் செயற்படக்கூடிய போதுமான செயற்பாடுகள் இல்லாமைக்கு வெகுஜன இயக்கங்களின்மையே காரணம்.

இவ்விமர்சனங்களைக் கண்டு கொண்டதைப் போல, ஜே.வி.பி.­யும் வெகு­ஜன இயக்கங்கள் பலவற்றைக் கட்டிக் கொண்டு இருப்ப­தைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமது ஜனநாயக உரிமைகளு­க்காகக் குரல்கொடுக்கவும், வெகுஜன வேலைகளை இயக்கு­வதற்கான அரசாங்க வளங்களைப் பயன்படுத்து­வதற்குமாகப் பாராளுமன்ற வழிமுறையை உயர்ந்த­பட்சம் பயன்படுத்தி வருவதா­கவே தோன்­றுகிறது. கடந்த காலங்களில், 1977 பொதுத் தேர்தல், 1979 உள்ராட்சி சபைத் தேர்தல், 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல், 1982 ஜனாதிபதித் தேர்­தல், 1994 பொதுத் தேர்தல், 1994 ஜனாதி­பதித் தேர்தல், 1997 உள்­ளுராட்சி சபைத் தேர்தல் என இது வரை சகல தேர்தல்­க­ளையும் ஏனைய இடது சாரிக் கட்சிகளுக்­கெல்லாம் முன்னுதாரணமாகப் பயன்படு­த்தி வந்திருக்கிறதென்று கூறலாம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் ஈடுபடுவ­தற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி. எதிரானதாயினும் தேர்தலைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மக்கள் மத்தியில் காலூன்ற வேண்­டுமெனில், வெகு­ஜன வேலைகளைப் பலப்­படுத்த வேண்டும். இந்த நடவடிக்­கையின் ஒரு பகுதியாகவே பாராளுமன்ற வழி­முறையைக் கூறி வருகிறது. ஆனால் இதுவே ஒரு இருப்பாகி, சந்தர்ப்ப­வாத அமைப்பாக ஆகிவிடுமா என்ற சந்தேகம் பரவலாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. எவ்வாறா­யினும் இன்றைய அரச அடக்குமுறைக்கான முஸ்தீபுகளுக்கு முகம் கொடுப்பதாயிருந்தால் இந்த வகை வியூகங்கள் அவசியமே. இன்னுமொரு முறை தேடி அழிக்கப்பட்டால் முன்னர் போலத் தலமறைவாவதில்லை. அடக்கு­முறைக்கு முகம் கொடுத்துக் கொண்டே ஜனநாயக செயற்பாடுகளுக்காகப் போரா­டுவோம் என்று இன்று கூறி வருவது கடந்த காலங்களிலிருந்து பெற்ற பாடங்களின் விளைவே என்று கூறலாம். ஆனால் கடந்த காலங்களில் கற்றுக்கொ­ள்ள வேண்டிய சகல முக்கியமான பாடங்களிலும் இந்தத் திருத்தம் இருக்கிறதா என்பது தான் பலரிடமுள்ள முக்கிய கேள்வி.