Thursday, January 22, 2009

புதிய இடது சாரி முன்னணி:
உறவும் முறிவும்





என்.சரவணன்.



கடந்த 12ஆம் திகதி, புதிய இடதுசாரி முன்னணியின் முதலாவது ”ஆண்டு விழா” அரசாங்க லிகிதர் சேவைகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

1953 இல் நடந்த அரிசி விலையுயர்வை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஹர்த்தால் நினைவு நாளும் இது தான். இத்தினத்திலேயே இந்த கூட்டத்­தையும் ஒழுங்கு செய்திருந்­தனர். அன்று அரசாங்கத்தையே கவிழ்க்கின்ற நிலைக்குச் கொண்டு சென்ற அந்தக் ஹர்த்தால் இன்று நினைவு கூரும் ஒரு பொருளாக மட்டுமே ஆகிவிட்டிருக்கிறது. ரஷ்யப் புரட்சி நினைவு, சீனப் புரட்சி நினைவு, கியுபப் புரட்சி நினைவு, பிரெஞ்சுப் புரட்சி நினைவு, இப்படியாக இடதுசாரி இயக்கங்­களிடம் கடந்த கால வெற்றிப் பெருமிதங்களுடன் நிறைவு­கொள்ளும் ஒரு வித நினைவு கூரல் கலாசாரம் மட்டும் தான் எஞ்சியிருக்கிறதோ எனும் சந்தேகத்தையே அவை எமக்கு விட்டு வைத்திருக்கின்றன.

இலங்கையின் இடதுசாரி இயக்­கங்­கள் சின்னா­பின்னப்பட்டு, அதன் துடிப்பை இழந்து, அதன் வீச்சை இழந்து வெறும் 50களுக்கு முன்னரான அதன் செயற்­பாடுகளை நினைத்து அந்த நினைவு­களோடே காலத்தைக் கழிக்கும் நிலையை வந்தடைந்தது வெறும் தற்செயலான ஒன்றல்ல.

முதலாளித்துவக் கட்சிகள் அடையாத அளவுக்கு இடதுசாரி இயக்கத்துள் இந்தச் சின்னா பின்னம் வந்ததன் பின்னணி என்ன?

இடதுசாரி இயக்கங்கள் முதலா­ளித்­­துவக் கட்சிகளுடன் கூட்டு வைத்து அவற்றிற்கிருந்த மக்கள் மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்ததன் காரணம் தான் என்ன?

அந்தளவுக்கு மக்கள் பிரச்சினை­களிலிருந்து விடுபட்டு விட்டார்­களா? அல்லது பிரச்சினைகள் குறைந்து விட்டனவா? அல்லது முதலாளித்துவ கட்டமைப்பு அவர்களது பிரச்சினை­களைத் தீர்த்து தம்பால் நம்பிக்கை­கொள்ளச் செய்து விட்டதா?

இவை தட்டிக்கழித்து தாண்டி­விட்டுச் செல்லக்கூடிய பிரச்சினைகள் அல்ல.
உண்மையைச் சொல்வதானால் பிரச்சினைகளின் வடிவங்கள் இன்னும் மாற்றம் கண்டு அளவு ரீதியில் பெருகி­யு­ள்ளன. ஆனால் அதற்­கேற்றாற்­போல இடதுசாரி இயக்கங்களின் தந்திரோ­பாயங்கள் மாற்றமுறவில்லை. அவை தந்திரோபாய வழிமுறைகள் எனக் கண்ட வழிகள் அனைத்தும் இன்று பெரும்பாலான உலக நாடுகளில் இடதுசாரி இயக்கங்களின் பின்ன­டைவுக்கு இட்டுச் சென்றுள்ளன என்பதை இன்று வரலாற்றை மறுமதிப்பீடு செய்யும் புரட்சிகர சக்திகள் பல தெளிவுறுத்தி வருகின்றன.

இந்த மதிப்பீடுகள் இலங்கை இடது­சாரி இயக்கத்துக்கும் பொருந்தும். மதிப்பீடுகள் என்ற பேரில், ஒவ்வொரு முறையும் இடதுசாரி இயக்­கத்திலிருந்து பிளவுபெறுகின்ற குழுக்கள் செய்ய­முயற்சிக்கின்ற’­செய்திருக்கின்ற போக்குகளைக் காணக்கூடியதாக இருக்கிறதென்றாலும் அவை இதுவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக் கூடியளவுக்கு போது­மானதாக இருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் வைத்துத்­தான் சமீபத்தில் புதிய இடதுசாரி முன்னணி பிளவுற்ற நிகழ்ச்சியையும் அது பற்றிய மதிப்பீட்டையும் செய்யும் கடமையும் அவர்களை வந்தடைகிறது.

ஆனால் இவ்வாறான விமர்­சனங்­கள் முன்வைக்கப்படுகின்ற போதெல்­லாம் உடனடியாக மறுத்தும், அவ்வாறான விமர்­சனங்களை முன்­வைத்தவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதும், அரசியல் கருத்துக்குப் பதில் கூறாது போலிக்­குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும், ”என்.ஜீ.ஓ”, ”சீ.ஐ.ஏ”, ”அமெரிக்கக் கைக்கூலி” என வழமையான வரட்டுத்தனமான குற்றச்­சாட்டுக்களை வசதியாகச் சுமத்தி விட்டு தப்பிவிடுவதும் தான் இங்கு நிகழ்கின்றன. அவை பற்றித் தொடர்ந்து விவாதிக்கக் கூட வழிகளைத் தராது ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி மூடிவிடுவது இலகுவானது தான். ஆனால் அதன் விபரிதம் சாதாரணமானது அல்ல.

மக்கள் முன் சுயவிமர்சனத்துக்கு கொஞ்சமும் தயாரில்லாத எந்தவொரு கட்சியும் மக்களின் கட்சியாக இருக்கப்­போவதில்லை. அது அராஜக, ஜனநாயக விரோத, மக்கள் மீது நம்பிக்கை கொள்ளாத கட்சியாக, மக்களை அணிதிரட்ட முடியாத கட்சியாகவே தொடாந்து இருக்கும் என்பது தான் இடதுசாரி இயக்க வரலாறு இது வரை கற்றுத்தந்த பாடம். ஒரு போதும் புரட்சிக்கு இது உதவப் போவ­தில்லை. குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அ.ஆ.இ ஐக் கூட இவர்கள் கடக்காததையே இது சுட்டும்.

புதிய இடதுசாரி முன்னணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல தடவைகள் சரிநிகரில் அது பற்றிய அவ்வப்போதைய நிலைமைகள் குறித்து கட்டுரைகள் வெளியிடப்­பட்ட­போது இத்தகைய மோசமான எதிர்கொள்ளலைத் தான் சந்திக்க முடிந்தது.

இறுதியாக புதிய இடதுசாரி முன்னிணிக்குள் விக்கிரமபாகு நடந்து­கொண்ட முறை, சபாநாயகர் பதவியில் அவர் காட்டிய ஆர்வம் என்பன பற்றி வெளிக்­கொணரப்­பட்டிருந்த உண்மை­களை புதிய இடதுசாரி முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயகக் கட்சியின் ஏடான புதிய பூமி பத்திரிகை எதிர்கொண்ட விதமும் அப்படித்தான் அமைந்தது.

ஆனால் அக்கட்சி புதிய இடதுசாரி முன்னணியிலிருந்து வெளியேறிதன் பின்னர் தான் விக்கிரமபாகு சபா­நாயகர் பதவியில் காட்டிய ஆர்வத்தை புட்டுபுட்டு வைக்கத் தொடங்கி­யிருக்கிறது. முன்னணி பிளவுபட அது ஒரு முக்கிய காரணம் என இன்று பிரசாரம் செய்கிறது. இவ்விமர்ச­னங்களை முன்வைத்த கட்டுரை­யாளர்கள் யாரும் ஒரு போதும் புதிய இடதுசாரி முன்னணிக்கு சரிநிகரில் வக்காலத்து வாங்கியதும் கிடையாது. அது சிதைவடைய வேண்டுமென கனவு கண்டதும் கிடையாது.

ஆனால் அது நடந்தது. அதற்கு காரணங்களாக சுழற்சி முறையில் முன்னணியின் செயலாளர் பதவி மாற்றப்படவேண்டுமென ஏற்கெனவே அங்கத்துவ கட்சிகள் கொண்டிருந்த உடன்பாட்டை நவ சமசமாஜக் கட்சி மீறியதாகவும், விக்கிரமபாகு சபா­நாயகர் பதவிக்கு ஆசைப்பட்டதை தாங்கள் நிராகரித்ததாகவும், கடந்த மாகாண சபைத் தேர்தலில் விக்கிரம­பாகுவுக்கு அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ சுவரொட்டிகளை அச்சடித்து கொடுத்­திருந்ததாகவும் பல குற்றச்­சாட்டுக்­களை தற்போது வெளி­வந்துள்­ளன. இவை மறுக்கக் கூடியவையல்லத்தான். ஆனால் பிரச்சினை அதுவல்ல.

இன்றைய இந்தப் பிளவை வெறும் இடதுசாரி முன்னணியின் பிளவாகப் பார்ப்பதா, அல்லது இதனை இடதுசாரி இயக்கப் போக்கின் குறியீடாக பார்ப்பதா என்பதே கேள்வி. வெறும் சம்பவம் என்றால் நூறோடு நூற்றிஒன்றாகப் போய்விடட்டும் என விட்டுவிடலாம் ஆனால் அப்படியல்ல. இது திடீரென ஏற்பட்ட, அல்லது இது வரை ஏற்படாத நிகழ்ச்சிகள் அல்ல என்பதைக் கருத்திற்­கொள்வோமா­யிருந்தால் இது ஒரு முக்கிய பிரச்சினை என்பது புலப்படும்.

ஒரு வருடம் கூட முற்றாக முடிவதற்குள் ஒரு இடதுசாரி முன்னணி பிளவடைந்­திருக்கிறது. மூன்று தேர்தல்­களைச் சந்தித்து ஒரு தேர்தலில் ஒரு மாகாணசபை உறுப்பி­னர் பதவியை பெற்ற பின், அப்பதவியின் காரணமாக இப்பிளவு நடந்திருக்கிறது. அப்பதவி யாரிடம் இருக்க வேண்டும் எனும் முடிவை முன்னணி­யின் அங்கத்துவ கட்சிகள் தீர்மானிப்பது என்று உடன்பாடு இருந்த போதிலும் அப்பதவி­யைக் கொண்டி­ருந்த ஒரே காரணத்­திற்காக கொண்டிருந்தவர் துஷ்பிர­யோ­கம் செய்ய முயற்சித்திருக்கிறார். தட்டிக் கேட்ட போது அதனை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள மறுத்­திருக்கிறார். அமைப்பு விதியை மீறியிருக்கிறார். எஞ்சியிருந்த கட்சிகளில் சில வெளியேறி முதலில் அறிக்கைப் போரில் இறங்கின. பின்னர் ஏனைய கட்சிகளுமாகச் சேர்ந்து தமக்கிடையில் ஒரு செயலாளரை நியமித்து இடதுசாரி முன்னணியாக அடையாளம் காட்டி தொழிற்படத் தொடங்கி­யிருக்­கின்றன.

இது தான் சாராம்சம். மொத்தம் ஆறு கட்சிகள் முன்னணியில் இருந்தன. ஈ.தம்பையா செயலா­ளராக இருக்கும் புதிய ஜனநாயகக் கட்சி, சிறிதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோஷலிசக் கட்சி, பற்றிக் பர்ணான்டோவின் தேசிய ஜனநாயக இயக்கம், வசந்த திசாநாயக்கவின் தியெச கல்வி வட்டம், முஹிர் ரகுமானின் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி என்பனவே அவை.

இவற்றில் நவ சமசமாஜக் கட்சி தம்முடன் முஸ்லிம் ஐக்கிய முன்னணி இருப்பதாகக் கூறிக்­கொள்கிறது. ஆனால் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியானது இடது சாரி முன்னணியைப் பதிவு செய்வதற்கு ஆதரவாக தமது கட்சி­யையும் இணைத்துக் கொண்ட கட்சி மட்டுமே. மேலும் அது ஒரு போதும் முன்னணி­யின் உயர்மட்டக் கூட்டங்கள் எதிலும் கலந்து கொண்டதுமில்லை. அதுமட்டு­மன்றி முன்னணி தொடக்கப்பட்டிருந்த காலம் தொட்டு எந்தத் தேர்தலிலும் சேர்ந்து போட்டியிடாததுடன், முன்­னணி போட்டியிட்ட இடங்களி­லெல்லாம் தான் தனித்துப் போட்டியிட்டது. முன்னணியின் செயற்பாடுகள் எதிலும் செயலளலவில் ஒத்து­ழைத்தது கூடக் கிடையாது.

நவசமசமாஜக்கட்சி வேண்டுமா­யின் தர்க்கத்துக்காக முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும் தம்முடன் இருக்கிறதென்று கூறிக்கொள்ளலாம். ஆனால் அப்பதில் நவ சமசமாஜக்­கட்சியின் நேர்மையின்மையையே காட்டுகிறது. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் ஒருமித்து எதிர்க்கையில் செயலாளர் பதவி­யையும், மாகாண­சபை உறுப்பினர் பதவியையும், தம்மிடம் வைத்துக்­கொண்டிருப்பதற்­கூடாக அக்கட்சி தம்மை அப்பட்டமாக அம்பலப்­படுத்திக்கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இதே வேளை நவ சமசமாஜக்­கட்சிக்கு வெளியில் இருக்கின்ற ”புதிய இடது சாரி முன்னணி”யில் அங்கம் வகித்த எந்தக் கட்சியும் நவ சமசமாஜக்கட்சி அளவுக்கு ஆட்பலம் உள்ள கட்சிகள் அல்ல. அவை விரல் விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்­களைக் கொண்ட கட்சிகள். புரட்சிகர கட்சிகளின் பலமானது எப்போதும் வெறும் உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்து எடை போடக்கூடிய ஒன்றல்லத் தான். ஆனால் இந்த இடத்தில் அவை கருத்திற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிற­தென்றால் இவை தட்டிக்கழித்து தாண்டி­விட்டுச் செல்லக்கூடிய பிரச்சினைகள் அல்ல.பெரும்பாலும் சமகால நடைமுறை செயற்­பாடுகளில் ஈடு­பட்டுக் கொண்டி­ருக்கிற பாராளு­மன்ற வழிமுறையில் நாட்ட­மதிக­முள்ள கட்சிகள் என்பதாலேயே. எனவே ஆட்பலம் என்பதை தட்டிக்­கழித்து­ விட்டுப்­போகவும் முடியாது.

கடந்த கால முன்னணியின் செயற்பாடுகளில் நவசம­சமாஜக்கட்சியின் உறுப்பினர்களின் பங்களிப்பே பெரு­மளவு முன்ன­ணியை முன்னோக்கித் தள்ளிச் சென்றுள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டர்கள். எனவே ஏனைய கட்சிகள் மீது ”வெறும் மேடையை பயன்படுத்திவிட்டுப் போகும் கட்சிகள் ”என்கின்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

இப்படியாக பரஸ்பர பிரச்சினை­களின் மத்தியில் தான் இந்தப் பிளவு, பிளவின் பின்னர் சமீபத்தில் நடத்தப்­பட்ட ஆண்டு நிறைவுக் கூட்டம்.

இக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகள் அதிகார குழுமத்தை எதிர்த்தோ அல்லது சமகால அரசியல் நிகழ்வுகளைக் கருத்திற்­கொண்டோ ஆற்றப்பட்ட உரை­களாக அமைய­வில்லை. நவ சமசமாஜக் கட்சியை அம்பலப்­படுத்துவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகத் தான் தோன்றியது.

எப்படியிருந்தாலும் இன்று விக்கிரம­­பாகுவும் நவ சமசமாஜக்­கட்சியும் மக்கள் நம்பிக்கையை காக்க செய்யக்கூடியது தாம் பதவிக்கு பித்துபிடித்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க மாகாண சபை உறுப்பினர் பதவியை அமைப்பு விதிப்படி ஏனைய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதே.

அதே வேளை இடதுசாரி இயக்கங்­களுக்கு வந்த முதல் சோதனை இதுவல்ல என்பதை கருத்திற் கொள்­வோ­மா­யின் இது வெறும் அரசியல் பிரச்சினையல்ல. இது அமைப்பின் கட்டமைப்போடு தொடர்பான அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினை. கடந்த கால இடதுசாரி இயக்கங்களின் பிளவுகளைப் பார்த்தால் அரசியல் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட பிளவுகளை அளவில் சிறிய எண்ணிக்­கையாகவே காணலாம். மாறாக ஊன்றித் தேடிப்பார்த்தால். அனைத்­திலும் அமைப்புத் துறையில் அதிகாரத்­துவம் மிஞ்சி அதன் விளைவு பிளவுகளை நோக்கி இட்டுச் சென்றிருக்கும். இது பற்றி நிறையவே பேசலாம். அதன் அரசியல் பற்றியும் பேசலாம். வெறும் பேச்சுக்காக அல்ல. அந்த அனுபவங்களிலிருந்து இனியே­னும் மீளும் வழி காண.

No comments: